கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். இதற்கு மு.கஅழகிரி தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி டீலாபானு முன்பாக விசாரணைக்கு வந்தபோது முன்னாள் மத்தியஅமைச்சர் மு.க.அழகிரி முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் திமுக நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம், செந்தில், கருப்பணன், பொன்னம்பலம்,ராமலிங்கம், நீதிதேவன், நாகராஜ், மயில்வாகனன், சேகர், தமிழரசன், சோலை, போஸ், பாலு, ராகவன், பாலகிருஷ்ணன், அய்யனார், வெள்ளையன் உள்ளிட்ட 20பேர் நேரில் ஆஜராகினர்.
வழக்கு தொடர்பாக 3 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் – 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் மு.க.அழகிரி புறப்பட்டபோது அழகிரியின் ஆதரவாளர் உதயகுமார் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்கள் முதலமைச்சர் உங்களை சந்திப்பாரா என்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மு.க.அழகிரி முதலமைச்சர் மதுரைக்கு வருவதே காலையில் தான் தெரிந்துகொண்டேன் என்னை சந்திப்பாரா என்பது எனக்கு தெரியாது என்றார்.