Doctor Vikatan: சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடலாமா?

Doctor Vikatan: என் சகோதரி வீட்டில் காபி, டீ, பிரியாணி, கறிக்குழம்பு என எல்லாவற்றையும் மீண்டும் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுகிறார்கள். முதல்நாள் சமைத்த உணவுகளையும் இப்படித்தான் செய்கிறார்கள். சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவது சரியானதா?

Abdul Rasheed, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த பொதுமருத்துவர் ஆதித்யன் குகன்

பொதுமருத்துவர் ஆதித்யன் குகன் | கோவை

சமைத்த உணவை சூடுபடுத்துவதில் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். முதல் விஷயம்… சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதால் உணவிலுள்ள ஊட்டச்சத்துகள் முழுவதும் அழிந்துவிடும்.

உணவில் ஸ்போர் (Spore) என ஒன்று இருக்கும். அதாவது அதை பாக்டீரியாவின் குழந்தை எனலாம். முதல்முறை சமைக்கும்போது, அந்தச் சூட்டில் அந்த ஸ்போர் செயலிழந்து விடும். சமைத்த உணவை அறை வெப்பநிலையில் அல்லது ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அந்த ஸ்போர் மீண்டும் பாக்டீரியாவாக உருவெடுக்கும்.

பொதுவாக உணவை சூடுபடுத்தும்போது, முதல்முறை சமைக்கிற அளவுக்கு, தீவிரமாக சூடுபடுத்த மாட்டோம். எனவே அந்த நிலையில், மீண்டும் உயிர்பெற்ற பாக்டீரியா சாகாது. அதன் விளைவாக அந்த உணவைச் சாப்பிடும் போது அது ஃபுட் பாய்சனாகிறது. இந்த விதி சிக்கன், மஷ்ரூம், உருளைக்கிழங்கு, பிரியாணி, சிக்கன் என எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

உணவில் நைட்ரேட் என ஒன்று இருக்கும். இது காலிஃப்ளவர், கீரை வகைகளில் அதிகம் இருக்கும். சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தும்போது, இந்த நைட்ரேட், நைட்ரைட்டாக மாறும். அது புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது. அதாவது கல்லீரல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய் உள்ளிட்ட பலவித புற்றுநோய் பாதிப்புக்கு காரணமாகக் கூடியது நைட்ரைட்.

சமையல் | மாதிரிப்படம்

எனவே நிறைய சமைத்து, மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி, இதுபோன்ற ஆபத்துகளை வரவழைத்துக் கொள்வதற்கு பதில், அவ்வப்போது ஃப்ரெஷ்ஷாக சமைத்துச் சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.