
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன், படப்பிடிப்பு தளத்தில் தாம் நூலிழையில் உயிர் தப்பியது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் மிகச்சிறந்த இசைக்கலைஞராக உருவாகி வருகிறார். இவர், ஓ காதல் கண்மனி, தில் பேச்சாரா உள்ளிட்ட பல படங்களில் பாடியிருக்கிறார். தனியாக ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார்.
மேலும் தந்தை ஏ.ஆர்.ரஹ்மானுடன், நாடு முழுவதும் இசை நிகழ்ச்சிகளை அமீன் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அண்மையில் பாடல் ஒன்றிற்காக இவர் நடத்திய படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இருதினங்களுக்கு முன்பு பாடல் ஷூட்டிங் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது குழு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டிருந்தது.
எனவே, அமீன் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் கேமரா முன் பாடுவதில் மும்மரமாக இருந்தனர். அப்போது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரஸ் மற்றும் சரவிளக்குகள் திடீரென்று கீழே விழுந்தன. இதனால் படப்பிடிப்பு குழுவனர் அதிர்ச்சி அடைந்தனர்.

சரவிளக்கு கீழே விழுந்த கம்பிகளுக்கு நடுவே அமீன் மற்றும் குழுவினர் நின்று கொண்டிருந்தனர். விழுந்த விளக்கு சில அங்குலங்கள் முன், பின் சென்றிருந்தாலோ அல்லது சில நொடிகள் அங்கும், இங்கும் நகர்ந்திருந்தாலோ மொத்த ரிக்கும் அமீன் உள்ளிட்ட குழுவினரின் தலையில் விழுந்திருக்கும்.
இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.அமீன், இன்று தாம் பாதுகாப்பாகவும், உயிருடனும் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும், பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஆன்மீக குருமார்களுக்கும் நன்றியை கூறிக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சி செய்தி தெரியவந்ததை அடுத்து, எல்லோரும் பாதுகாப்பாக இருக்கமாறு அமீனுக்கு கமென்ட் மூலம் அறிவுரை சொல்லி வருகின்றனர்.
newstm.in