
'என்டிஆர் 30' படத்தில் ஜான்வி கபூர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மறைந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கில் எண்ணற்ற படங்களில், பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பின் ஹிந்திப் பக்கம் சென்றவர். அங்கும் அதே போல் நடித்து இந்தியாவின் நம்பர் 1 நடிகையாக இருந்தவர்.
அவரது மூத்த மகளான ஜான்வி கபூர் ஹிந்தியில் அறிமுகமாகி அதில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால், அவ்வப்போது அவர் தமிழில் நடிக்க வருகிறார், தெலுங்கில் நடிக்க வருகிறார் என்ற தகவல்கள் வந்து காணாமல் போகும்.
ஆனால், இப்போது அது நிஜமாகியிருக்கிறது. 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள அவரது 30வது படத்தின் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பை இன்று(மார்ச் 6) ஜான்வியின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்கள்.
கடலும் மலையும் சார்ந்த இடத்தில் பாவாடை தாவணியில் சற்றே கிளாமராக ஒரு கல்லின் மீது ஜான்வி அமர்ந்திருக்கும் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு.
“கடைசியாக இது நடக்கிறது…. எனது அபிமான ஜுனியர் என்டிஆர் உடன் இணைந்து பயணிக்க இருப்பதை காத்திருக்க முடியவில்லை,” என தனது தெலுங்கு அறிமுகம் பற்றி குறிப்பிட்டுள்ளார் ஜான்வி கபூர்.