தென்னிந்தியப் படங்களை 'டிரோல்' செய்யும் ஷாரூக் ரசிகர்கள்

இந்தியத் திரையுலகத்தில் இதுவரையில் வெளிவந்த அனைத்து மொழிப் படங்களிலும் அதிகமான நிகர வசூலைக் குவித்த படமாக தெலுங்குப் படமான 'பாகுபலி 2' படம் இருந்து வந்தது. 2017ல் வெளிவந்த அந்தப் படம் 510 கோடி நிகர வசூலைப் பெற்றது. அந்த சாதனை கடந்து ஆறு வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் ஷாரூக்கான், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ஹிந்திப் படமான 'பதான்' படம் 'பாகுபலி 2' படத்தின் நிகர வசூலைக் கடந்து தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதையடுத்து தென்னிந்தியப் படங்களை 'டிரோல்' செய்து பலவிதமான மீம்ஸ்களை ஷாரூக் ரசிகர்கள் வெளியிட்டு வருகிறார்கள். பதிலுக்கு தெலுங்கு சினிமா ரசிகர்களும் மீம்ஸ்களை வெளியிடுகிறார்கள்.

ஷாரூக் கான் மட்டுமே இந்த புதிய சாதனையைப் படைத்துள்ளார். அதே சமயம் சமீபத்தில் வெளிவந்த அக்ஷய்குமாரின் 'செல்பி' படம் 20 கோடி வசூலைக் கூடக் கடக்க முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது.

தென்னிந்தியாவிலிருந்து அடுத்து பல பான் இந்தியா படங்கள் இந்த வருடத்திலேயே வெளியாக உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்று 'பதான்' படத்தின் சாதனையை முறியடிக்கவும் வாய்ப்புள்ளது. ராம் சரண், ஷங்கர் கூட்டணியின் 'ஆர்சி 15', பிரபாஸ் நடிக்கும் 'சலார்', அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2', ஜுனியர் என்டிஆரின் 'என்டிஆர் 30' என பல பிரம்மாண்டத் தெலுங்குப் படங்கள் இந்த ஆண்டில் வெளியாக உள்ளன.

ஷாரூக் பெற்ற வெற்றியை மற்ற ஹிந்தி ஹீரோக்களும் பெற்றால் தான் பாலிவுட் முழுமையாக மீள முடியும். ஒரு வெற்றியை வைத்து கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை என்று பாலிவுட்டினர் கூறி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.