அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: என்னென்ன விவாதிக்கப்பட்டது?

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விரைவில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் திமுக ஆட்சியின் அவலங்களையும் அதிமுக ஆட்சியின் சிறப்பான திட்டங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் பேசப்பட்டது.

அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தலைக் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கவில்லை. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த சிக்கலும் இல்லை. அது குறித்து உங்களுக்கு முறையாக அறிவிக்கப்படும்.

ஓ.பன்னீர் செல்வம் நடத்துவது கட்சி அல்ல. அவர் கடை நடத்திக் கொண்டிருக்கிறார். அதிமுக கொடி, லோகோ உள்ளிட்டவற்றை ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்துவது குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை தவிர்த்து அங்கிருந்து யார் வந்தாலும் தாய் உள்ளத்தோடு ஏற்றுக்கொள்வோம்.

எடப்பாடி பழனிசாமியின் உருவப் படத்தை எரித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது போன்ற செயல்கள் இனி நடக்காது என்று பாஜக தலைவர்கள் கூறுவதை நாங்கள் நம்புகிறோம். ஜெயலலிதாவை ஒப்பிட்டு பேசியது அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து. ஜெயலலிதா போல் ஒரு தலைவர் இதற்கு முன் உருவாகியதில்லை, இனிமேலும் உருவாக முடியாது. அவருக்கு நிகர் யாரும் இல்லை.

பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது. மத்தியில் பாஜக தலைமையிலும், மாநிலத்தில் அதிமுக தலைமையிலும் கூட்டணி தொடர்ந்து வருகிறது. பாஜக – அதிமுக இடையே மோதல் இல்லை.

ஆன்லைன் ரம்மியை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்பதில் அதிமுகவுக்கு மாற்றுக் கருத்து இல்லை. இதற்கு சட்டம் இயற்ற அதிகாரம் மாநில அரசுக்கு தான் இருக்கிறது என்பதை ஆளுநருக்கு தெளிவுபடுத்த திமுக அரசு தவறிவிட்டது” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.