இந்தியா – ஆஸ்திரேலியா கடைசி டெஸ்ட்: பிரதமர் மோடியுடன் போட்டியை கண்டு ரசித்த ஆஸ்திரேலிய பிரதமர்..!

ஆமதாபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் இரு டெஸ்டுகளில் இந்தியாவும், இந்தூரில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய – ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனியுடன் பிரதமர் மோடி இணைந்து ரசித்தனர். பின்னர் முதல் அரை மணி நேர ஆட்டத்தை பார்த்துவிட்டு, இரு பிரதமர்களும் மைதானத்தில் இருந்து புறப்பட்டனர்.

அவரது வருகையையொட்டி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்களை கேப்டன் ரோகித் சர்மா பிரதமர் மோடிக்கு அறிமுகம் செய்தார். பிரதமர் மோடி வீரர்களுக்கு கைகொடுத்து உற்சாகப்படுத்தினார். ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு பிரதமர் ஆண்டனி கைகொடுத்து உற்சாகப்படுத்தினார்.

இதையடுத்து இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து தற்போது ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கியுள்ளனர். இதுவரை 11 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 38 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா 19 ரன்களும் டிராவிஸ் ஹெட் 8 ரன்களும் எடுத்துள்ளனர்.

இந்திய அணி சார்பில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் இருவரும் தலா 5 ஓவர்கள் பந்துவீசி முறையே 13 மற்றும் 16 ரன்கள் கொடுத்துள்ளனர். அஸ்வின் 1 ஓவர் மட்டும் வீசி ரன் எதுவும் கொடுக்கவில்லை.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.