கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கோவை மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகளவு காட்டுத்தீ பிடித்து வருகிறது. வெள்ளியங்கிரி, வால்பாறை போன்ற மலைப்பகுதிகளில் காட்டுத்தீ பிடித்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வால்பாறை அருகே அக்காமலை உள்ளது.

அங்கு சுமார் 5,000 ஹெக்டேர் பரப்பளவில் கிராஸ்ஹில்ஸ் உள்ளது. இதை தேசிய பூங்காவாக அறிவித்து மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பராமரித்து வருகின்றனர்.
கடந்த வாரம் கேரளா இடுக்கி மாவட்டம் மூணாறு, மறையூர் வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டது. இது அங்கிருந்து கிராஸ்ஹில்ஸ் பகுதிக்கும் பரவியது. இதில் மரங்கள், செடிகள் கருகின.

இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில்தான், இது இயற்கையாக ஏற்பட்ட தீ இல்லை என்றும் மர்மநபர்கள் சந்தனமரம் கடத்துவதற்காக போட்ட சதித்திட்டம் என்றும் தெரியவந்தது. மறையூரில் இருந்து கிராஸ்ஹில்ஸ் வழியாக சந்தன மரம் கடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அந்தப் பகுதிக்கு தீ வைத்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜிவ்காந்தி என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரது பின்னணியில் உள்ள சந்தன கும்பல் குறித்தும் தமிழக, கேரள வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூகவிரோதிகள் நடமாட்டத்தால், வனப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.