போபால்: ஹோலி கொண்டாட்டத்தின்போது குளத்தில் மூழ்கி புதுமண தம்பதி உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். மத்திய பிரதேச மாநிலம் ரட்டிலம் மாவட்டம் இசர்துனி கிராமத்தை சேர்ந்த 20 வயது புதுமணப்பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகையை குதூகலமாக கொண்டாடினார். பின்னர் அங்குள்ள குளத்தில் அந்த பெண் குளித்தார். நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் (23), குளத்தில் இறங்கி தேடினார். ஆழமான பகுதிக்கு சென்றார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.
இதை பார்த்த அந்த புது மணப்பெண்ணின் தம்பி (13) மற்றும் தங்கையும் (10) குளத்தில் இறங்கி தேடினர். அவர்களும் தண்ணீரில் மூழ்கினர். 4 பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இறந்த தம்பதிக்கு 2 வாரங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் மூழ்கி புதுமண தம்பதி உள்பட 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.