புதுடெல்லி: ஓய்வுபெற்ற அக்னி வீரர்களுக்கு துணை ராணுவமான எல்லை பாதுகாப்பு படையில் சேருவதற்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படையில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அக்னிவீரர்கள் திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அவர்கள் 4 ஆண்டுகள் பணியாற்றலாம்.
ஓய்வு பெற்ற அக்னிவீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் உச்ச வயது வரம்பில் தளர்வுகளுடன் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. முதல் பேட்ச் அக்னிவீரர்களுக்கு 5 ஆண்டு வயது தளர்வும், அடுத்த பேட்ச்களில் இருந்து 3 ஆண்டு வயது வரம்பு தளர்வும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.