மதுரையில் 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோவில் வைத்து விற்பனை செய்த நான்கு பேரை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் கோச்சடை பகுதியில் எஸ்.எஸ்.காலனி போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அப்பகுதியில் ஆட்டோ ஒன்று சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்துள்ளது. இதனால் போலீசார் ஆட்டோவில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், போலீசார் ஆட்டோவில் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் ஆட்டோவில் 23 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆட்டோவில் இருந்த 4 பேரையும் கைது செய்த போலீசார் 23 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், அவர்கள் நான்கு பேரும் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அருண்பாண்டி, சுப்பிரமணி, முத்துக்குமார், மணிகண்டன் என்பதும், அவர்கள் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அங்கிருந்து தப்பி ஓடிய மேலும் இரண்டு பேர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.