செங்கல்பட்டு: கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: செங்கல்பட்டு மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண்.76, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நாள் 14.6.2018ல் வெளியிடப்பட்டன. மேலும், இத்திட்டத்தின் கீழ் நிகழ்நிலை ஆன்லைனில் 14.6.2018 முதல் 13.9.2018 வரை 3 மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இசைவு வழங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ரிட் மேல்முறையீட்டு மனு பலவற்றில் வழங்கப்பட்டுள்ள 10.2.2021 தேதிய தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்ற உத்தரவின்படி, 22.3.2021 முதல் 4.4.2021 வரை இரு வார காலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமான விண்ணப்பம் சமர்ப்பிக்க மீண்டும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு அரசால் 24.6.2022 முதல் 31.12.2022 வரை வழங்கப்பட்டது.
தற்போது, இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றொரு வாய்ப்பாக 30.6.2023 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் உரிய விபரங்களை சமர்ப்பித்து இசைவு பெற செங்கல்பட்டு மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை அணுகலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://tcp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என, இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.