அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் பாதுகாப்பு கோரிய வழக்கு: காவல் துறை டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: காவல் துறை பாதுகாப்பு கோரிய அதிமுக எம்.பி சி.வி.சண்முகத்தின் மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்பியுமான சி.வி.சண்முகம் கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், “கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அன்று, என் வீட்டில் நுழைந்த மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில், எனது மைத்துனர் கொல்லப்பட்டார். அதன்பின் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. எனது துப்பாக்கி உரிமத்தையும் புதுப்பித்து தரவில்லை.

தற்போது 2006-ல் நடந்த சம்பவம் தொடர்பான வழக்கு சாட்சி விசாரணை கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.பாதுகாப்பை விலக்கியதற்கான காரணத்தை தனக்கு தெரிவிக்க வேண்டும். எனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் 2021ம் ஆண்டு நவம்பர் மாதமும், கடந்த ஆண்டு ஜனவரி மாதமும் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், கொலை தொடர்பான வழக்கின் விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

அப்போது சி.வி.சண்முகம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன், “பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு அளித்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனு கொடுத்து ஓராண்டுக்கு மேலாகியும் பதிலளிக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பாதுகாப்பு கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த மனு மீது எடுக்கபட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.