5 நாட்கள் பராமரித்து வந்த குட்டி யானையை பிரிய மனமில்லாமல் வன ஊழியர் கதறி அழுத சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கட்டமடுவு நான்கு மாத குட்டி யானை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. சுமார் 30 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் குட்டி யானை விழுந்த நிலையில் அதை வனத்துறையினர் போராடி மீட்டனர்.
கடந்த ஐந்து நாட்களாக அதனை யானை குட்டியின் குடும்பத்துடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக போராடி வந்தனர். ஆனால் அந்த யானை குட்டியை அதன் குடும்பத்தினர் சேர்த்துக் கொண்ட பாடில்லை. இதை அடுத்து சமீபத்தில் ஆஸ்கர் விருது வாங்கிய பொம்மன், பெல்லி தம்பதியிடம் இந்த யானையை ஒப்படைக்க வனத்துறை முடிவு செய்தது.
இந்த நிலையில் முதுமலை வன சரணாலயத்திற்கு அனுப்பி வைப்பதற்காக ஒரு டெம்போவில் யானையை ஏற்றி அனுப்பினார்கள். அப்போதே கடந்த ஐந்து நாட்களாக யானை குட்டியை தனது மகனைப் போல அன்பாக பராமரித்து வந்த வன ஊழியர் யானை குட்டியை பிரிய மனமில்லாமல் கதறி கதறி அழுது கொண்டே அதை வழி அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.