பெங்களூரு: சந்திரயான் 3 திட்டத்தின் முக்கியமான விண்கல ஒலியியல் மற்றும் அதிர்வு சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது என இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 திட்டத்திற்கான தொழில்நுட்ப பணிகள் கடந்த 2 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில் அமைப்பு ரீதியாக உள்ள பணிகள் ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதில் பயன்படுத்தப்படும் கிரையோஜினிக் என்ஜினின் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேகேந்திரகிரியின் இஸ்ரோ வளாகத்தில் உள்ள உயர்தர சோதனை மையத்தில் 25 வினாடிகளில் கிரையோஜினிக் என்ஜினின் வெப்ப சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் சந்திரயான் விண்கலத்தில் உள்ள ரோவர் ஆர்பிட்டர் அமைப்பினுடைய ஒலியியல் மற்றும் அதிர்வு சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜூன் இறுதியில் சந்திரயான் 3ன் விண்கலத்தை விண்ணில் ஏவ உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்த நிலையில் இஸ்ரோ திட்டமிட்டபடி சோதனை முயற்சிகள் வெற்றிகரமாக முடிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 2 திட்டத்தின் ரோவர் லேண்டர் சந்திரனுடைய மேற்பரப்பை அடையும்போது வெடித்து சிதறிய நிலையில் சந்திரயான் 3 திட்டத்தில் இந்த ரோவரும் இணைக்கப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.