ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன். பி.டெக் பட்டதாரியான சரவணன் ஹைதராபாத்தில் உள்ள வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தெலுங்கானா மாநிலம் வனபதியை சேர்ந்த 20 வயது பெண்ணான ருக்மணிக்கும், இவருக்கும் கடந்த மாதம் 1ஆம் தேதி திருமணம் நடந்தது.
உறவினர்கள் கிண்டல்
திருமணம் முடிந்ததும், அன்று இரவே மணமகள் ருக்மணியின் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் சரவணன் மறுத்ததால் முதலிரவு நடக்கவில்லை. சில நாட்களுக்கு பிறகு சரவணன் முதலிரவுக்கு மறுத்ததை ருக்மணி தனது பெற்றோரிடம் கூறினார்.
இதனால் மணப்பெண்ணின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தகவல் பெண்ணின் உறவினர்களிடம் கசிந்துள்ளது. அவர்கள் சரவணனை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சரவணனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த சரவணனும், அவரின் பெற்றோரும் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தப்பித்த தந்தை
இந்நிலையில், சரவணன், தனது மனைவி ருக்மணியை மாடிக்கு அழைத்துச் சென்று, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டினார். இதேபோல், ருக்மணியின் தந்தை வெங்கடேஸ்வரலு மற்றும் அவரது தாய் ரமாதேவியை சரவணனின் தந்தை பிரசாத் கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் வெங்கடேஸ்வரலு ரத்த காயத்துடன் தப்பித்தோடினார்.
இதில் மணமகள் ருக்மணி, அவரது தாய் ரமாதேவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலை தொடர்பாக சரவணன், அவரது தந்தை பிரசாத் உள்பட பலரை கைது செய்தனர்.