திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தின் பின்புறம் வஉசி சாலைப் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மனைவி சீதாலட்சுமி. இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் கடந்த, 12ம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி சென்றுள்ளார்.
இதை கண்காணித்த மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்து, சீதாலெட்சுமியை உருட்டுக் கட்டையால் தலையின் பின்புறம் அடித்துள்ளார். இதில், படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த அவரை, இழுத்து ஓரமாக வீசிய அந்த நபர், சீதாலெட்சுமியின் இருசக்கர வாகனம் மற்றும் செல் போனை எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
பின்னர் மயக்கம் தெளிந்த சீதாலட்சுமி சம்பவம் குறித்து போலீசை புகார் அளித்துள்ளார். அதன் படி, போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அந்த நபர், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமனேரி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பதும், தற்போது அவர் தாராநல்லூர் கீரைக்கடை பஜாரில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் அவரை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று தடுப்புக் கட்டையின் மீது மோதி கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் அவரது கால் உடைந்துள்ளது. இதையடுத்து, போலீசார் அவரை மீட்டு, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதன் பின்னர், போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவுச் செய்து, இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, நடைப்பயிற்சி மேற்கொண்ட பேராசிரியரை செந்தில்குமார் தாக்கி, அவரை இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.