நகை திருட்டு தொடர்பாக மேலும் ஒருவர் கைது: ஐஸ்வர்யாவிடம் விசாரிக்க காவல்துறை முடிவு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பணிப் பெண்ணிடமிருந்து, புகாரில் தெரிவிக்கப்பட்டதை விட அதிக நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் ஐஸ்வர்யாவிடம் விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது வீட்டு லாக்கரில் இருந்த 60 பவுன் நகைகள் திருடப்பட்டுவிட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார். அதன்படி, காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

முதல் கட்டமாக ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்து வந்த சென்னை மந்தவெளி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரி (46), கார் ஓட்டுநர் திருவேற்காடு மனசுரா கார்டனைச் சேர்ந்த வெங்கடேசன் (44) ஆகிய இருவரிடமும் போலீஸார் விசாரித்தனர். இதில் ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரும் கூட்டுசேர்ந்து ஐஸ்வர்யா வீட்டில் நகை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் கடந்த 21-ம் தேதி கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 100 பவுன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டுப் பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டன. ஐஸ்வர்யா தனது வீட்டிலிருந்து 60 பவுன் திருடு போனதாகப் புகாரில் தெரிவித்த நிலையில் 100 பவுனுக்கு மேல் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இது தொடர்பாக ஐஸ்வர்யாவிடம் விசாரிக்க காவல் துறை முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி, திருட்டு நகைகளை வாங்கியதாக மயிலாப்பூரை சேர்ந்த வினால்க் சங்கர் நவாலி என்பரை தேனாம்பேட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.