கொல்லைப்புறம் – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

“என்ன தாத்தா, இவ்ளோ பெரிய வீட்டுலே ரெண்டு பாத்ரூம் தான் கட்டியிருக்க.. ரெண்டும் ஆக்குபைட். எனக்கு அவசரமா டூ பாத்ரூம் வருது.” என்று அழுதபடி நின்ற என் ஐந்து வயது பேரன் கிரீஷ் குரல் கேட்டு ஈசிசேர் அரைத் தூக்கத்திலிருந்து எழுந்தேன். “கொஞ்சம் பொறுடா. அவசரத்துக்கு கொல்லப்பக்கமாவா போக முடியும்” என்று அவனைத் திட்டினாள் மருமகள் புனிதா.

‘கொல்லைப்பக்கம்’ என்ற வார்த்தை டைம் மிஷின் போல சடாரென்று என்னை நாற்பது வருடங்களுக்கு முந்தைய ஜூலை வெய்யில் நாள் ஒன்றின் நினைவலைகளில் தள்ளியது.

அன்றைய தினம் நான் பணி புரியும் அடையாரில் உள்ள வங்கிக் கிளைக்குள் நுழையும் போதே சேமிப்புக் கணக்குப் பிரிவில் புதிதாக அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை கவனித்தேன். அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் கையெழுத்திடும் சமயம் அக்கவுண்டன்ட் மகாதேவன் சொன்னார். “புதுசா டிரான்ஸ்ஃபர்ல வந்த பொண்ண சேவிங்ஸ் கவுண்டர்ல போட்டிருக்கேன். ஆபீஸ் ஆர்டர் டைப் பண்ணிடுப்பா.”

Representational Image

மணி எட்டு. வங்கி எட்டரைக்குத் தான் செயல்படத் துவங்கும். மீண்டும் அந்த பெண்ணை அங்கிருந்தே கவனித்தேன். ஒடிசலான உருவம். கருப்புக்கும் மாநிறத்துக்கும் இடையிலான நிறம். கொஞ்சம் பழையது தான் என்றாலும் பளிச்சென்ற அரக்கு நிறப்புடவை அணிந்திருந்தாள். நெற்றியில் சின்னதாக குங்குமப் பொட்டு. லேசாக விபூதி கீறல். கிளையில் சேரும் முதல் நாள் என்பதால் கோயிலுக்குப் போய் வந்திருக்கக் கூடும். பார்த்ததுமே அந்தப் பெண் வறுமையின் பிடியிலிருந்து தப்பித்து முன்னேற முயலும் ஒரு ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவள் என்று கணித்து விடலாம்.

கவுண்டரில் வரிசையாக அடுக்கியிருந்த லெட்ஜர்களில் ஒன்றை எடுத்து வெளியே பிதுங்கி நிற்கும் தாள்களை லெட்ஜர் கீ மூலம் சரி செய்து கொண்டிருந்தாள். எண்பதுகளில் வங்கிகளில் கம்ப்யூட்டர் கிடையாது. வெறும் பேனாவும் லெட்ஜரூம் தான்.  மொபல் ஃபோன் இல்லை. அவ்வளவு ஏன்?  எஸ்டிடி கூட இல்லை. ட்ரங்கால் மட்டும் தான். அருகில் சென்று “குட் மார்னிங்” என்றதும் கொஞ்சம் விழித்து பின் சுதாரித்து “வணக்கம் சார்” என்று கை கூப்பினாள்.

“நான் கோபிநாத். இந்தக் கிளையின் ஊழியர் சங்கப் பிரதிநிதி என்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். “இந்த லெட்ஜர் சரி பண்ற வேலையெல்லாம் சப்ஸ்டாப் மாரிமுத்து கிட்ட சொன்னா செஞ்சிடுவான்” என்றேன்.

“பரவாயில்ல சார், நான் ஃப்ரீயா தானே இருக்கேன்” என்று புன்முறுவல் செய்தாள். 

“அப்புறம், அங்கயற்கண்ணி, நீங்க மதுரைப் பக்கமா?” 

Representational Image

“ஓ, பேர வெச்சி கெஸ் பண்ணீங்களா..நான் பக்கா மெட்ராஸ்.. வண்ணாரப்பேட்டை” என்று சொல்லி சிரித்தாள்.

“நீங்க மதியம் லஞ்சுக்கு மாடிக்கு வந்திடுங்க. நான், மாலா, ராமசுப்பு, கதிரவன் எல்லோரும் அங்க இருப்போம்” என்று சொல்ல “சரிங்க சார்” என்றாள்.

அங்கயற்கண்ணிக்கு முதல் போஸ்டிங் திருவண்ணாமலை தாண்டி ஒரு சிறிய குக்கிராமக் கிளை ஒன்றில். அங்கு கிளை நிர்வாகி மற்றும் பியூன் உட்பட மொத்தமே நான்கு பேர் தான். அங்கயற்கண்ணி குறித்து சங்கத்திலிருந்து ஏற்கனவே எனக்கு சில செய்திகள் சொல்லபட்டிருந்தது. அந்தக் கிளையில் பணிக்கு சேர்ந்த சில மாதங்களிலேயே அங்கயற்கண்ணி ஊழியர் சங்கத்திலிருந்து ஏதோ பிரச்னையால் விலகி விட்டதாகவும் எப்படியாவது மீண்டும் அவரை சங்கத்தில் உறுப்பினராக்க வேண்டும் என்றும் கட்டளை இடப்பட்டிருந்தது.

லஞ்ச் ரூமில் எங்களுக்கு முன்னே அங்கயற்கண்ணி வந்து அமர்ந்திருந்தாள். அவள் கொண்டு வந்திருந்த கீரை மசியலையும் காலிஃப்ளவர் ரோஸ்டையும் எங்களோடு ஷேர் செய்தாள். அது மட்டுமல்லாமல் நாங்கள் கொண்டு வந்திருந்த பதார்த்தங்களையம் ஆர்வத்துடன் எடுத்துக் கொண்டாள். மெதுவாய் நான் பேச்சை ஆரம்பித்தேன். “நீங்க ஏன் இன்னும் யூனியன்ல மெம்பர் ஆகல”

“எதுக்காக?” திடமாக எதிர் கேள்வி வந்தது.

இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றாலும் சமாளித்தபடி “என்ன இப்படி சொல்லிட்டீங்க. ஒரு அவசரம் உதவின்னா நமக்காக குரல் கொடுக்க ஒரு அமைப்பு வேண்டாமா?”

“உதாரணத்துக்கு…”

“உதாரணத்துக்கா.. சரி, நம்ம கிளையிலே இருக்கிற பாத்ரூமுக்கு போனீங்களா. அங்க வசதியெல்லாம் எப்படி இருக்கு”

“போனேன். ஏதும் குறை இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலயே”

“அப்ப நீங்க சரியாப் பாக்கல. அங்க முகம் பார்க்கிற கண்ணாடி உடைஞ்சிருக்கு. அப்புறம் கை கழுவ சோப்பு கிடையாது. தரையில ஒரு டைல்ஸ் உடைஞ்சு கிடக்குது..”

“அப்படியா.. இதைப் பற்றி மேனேஜர் கிட்ட பேசிப் பார்க்கலாமே”

“எதுக்கு, அவருக்குத் தெரியாதா என்ன. அவரும் தான் தினம் பாத்ரூம் போறாரு. அவர் கிட்ட சொல்லிப் பயன் இல்லை. இதுவே சங்கத்துல சொன்னா உடனே நடவடிக்கை வரும்.”

“இந்த சங்க நடவடிக்கை எல்லா இடத்திலேயும் பாரபட்சம் இல்லாம நடக்குமா?” 

இப்போது எனக்கு புரிந்து விட்டது. ஊழியர் சங்கத்துடன் அங்கயற்கண்ணிக்கான பிரச்சனை பழைய வங்கிக் கிளையில் தான் தொடங்கி இருக்கும் என்று. 

“உங்களுக்கும் யூனியனுக்கும் என்ன பிரச்னை” ஆர்வத்துடன் கேட்டாள் மாலா.

“கதை கொஞ்சம் பெருசா இருக்கும். பரவாயில்லையா”

“அவசரமே இல்ல. போஸ்ட் லஞ்ச் செஷனுக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு”. வலிமையான ஊழியர் சங்கத்துடன் சண்டையிடும் அளவுக்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ராமசுப்புவுக்கும் ஆர்வம். 

Representational Image

ஒரு இளம் டைரக்டர் தன் முதல் படத்துக்கு தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் நேர்த்தியுடன் சொல்ல ஆரம்பித்தாள் அங்கயற்கண்ணி.

வங்கியில் வேலை கிடைத்துவிட்டது என்றதும் அங்கயற்கண்ணி, அம்மா, தம்பி எல்லோருக்கும் சந்தோஷம் தலைகால் புரியவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் திருவண்ணாமலைக்கு போய் அந்த கிராமப்புற வங்கிக் கிளையில் பணிக்குச் சேர வேண்டும். திருவண்ணாமலை டவுனில் தங்கிக் கொண்டு அங்கிருந்து பஸ் பிடித்து ஒரு மணி நேரத்தில் கிளைக்குச் சென்று விடலாம் என்று ராமு மாமா சொல்லி இருந்தார். அப்பா இல்லாத குடும்பத்தை எப்படியாவது கரை சேர்க்க வேண்டும் என்ற நினைப்பில் அதைப் பற்றியெல்லாம் அங்கயற்கண்ணி கவலைப்படவில்லை. சுளையாக ஆயிரம் ரூபாய் சம்பளம் வங்கியைத் தவிர வேறுயார் தருவார்கள்.

டவுன் பஸ் பிடித்து கிராமத்தில் இறங்கியபின் வங்கியைக் கண்டுபிடிக்க அவ்வளவு சிரமம் ஏற்படவில்லை.

“அதோ.. தூரத்துல பொட்டல் வெளியில நடுவால பனமரம் பக்கத்துல இருக்குதே, அதான்” என்று வழி காட்டினார் பெட்டிக்கடைக்காரர்.

“மொத்தமே பத்துக்கு பதினைந்து சதுர அடியில் ப்ராஞ்ச். மானேஜர், கேஷியர், பியூன் அப்புறம் நான்..அவ்வளவு தான்.” விவரித்தாள் அங்கயற்கண்ணி.

“கஸ்டமர் கூட்டம் எப்படியிருக்கும்?” மாலா கேட்டாள்.

“கூட்டமா.. ஒரே சமயத்துல மொத்தம் நாலு பேரு இருந்தா அதிகம். வேர்க்கடலை சாகுபடி சீசன்ல கூட்டம் அலை மோதும். கக்கத்திலே, சுருக்குப் பையில வச்சிருக்கிற சில்லறக்காசையும் பணத்தையும் கவுண்டர்ல அள்ளிக் கொட்டுவாங்க. எண்ணிப் பார்த்தா மொத்தம் அம்பது ரூபா கூட தேறாது. அதுல சிலசமயம் வேர்க்கடலை தோல் எல்லாம் கூட இருக்கும்”.

“அடக்கஷ்டமே!” அங்கலாய்த்தாள் மாலா.

“ஆனா பாவம், வெள்ளந்தியான மனுஷங்க. நம்ம மேல அவ்வளவு மரியாதை நம்பிக்கை வச்சிருப்பாங்க.” கதையைத் தொடர்ந்தாள் அங்கயற்கண்ணி.

முதல் நாள் பணியில் இரண்டு மணி நேரம் முடிந்ததும் கேஷியரிடம் “பாத்ரூம் போகணும். டாய்லெட் எங்க இருக்கு” என்று கேட்க அவர் பியூன் சந்திரனிடம் “சந்திரா.. இவங்கள கொல்லப்பக்கம் கூட்டிட்டு போ” என்றார்.

“ஒன் பாத்ரூமா.. டூவா” தலையைக் கூட உயர்த்தாமல் வவுச்சர்களில் ரப்பர் ஸ்டாம்ப் அடித்தபடி சந்திரன் கேட்டான்.

இதெல்லாம் எதுக்கு என்ற கூச்சத்துடன் ‘ஒன் பாத்ரூம் தான்’ என்று பதில் சொன்னாள் அங்கயற்கண்ணி.

வங்கிக்குப் பின்புறமாக அங்கயற்கண்ணியை வெளியே அழைத்துச் சென்ற சந்திரன் “அதோ அங்கிட்டு தூர ரெட்டப் பனமரம் தெரியுது இல்லையா. அதுக்கு பக்கத்துல கொஞ்சம் புதர் மண்டிக் கிடக்குதில்ல, அதுக்கு பின்னாடி இருந்திட்டு வாங்க. நான் இங்கன தான் இருப்பேன். அங்கிட்டு யாரும் வராம பாத்துக்கிறேன். பயப்படாம போங்க” என்றான்.

கதை கேட்டுக் கொண்டிருந்த மாலா “அய்யய்யோ” என்றாள்.

“இதே வார்த்தையைத் தான் நானும் அன்றைக்கு சொன்னேன்” அதிர்ச்சியில் உறைந்திருந்த எங்களிடம் சொல்லிவிட்டு மீண்டும் கதைக்குத் திரும்பினாள் அங்கயற்கண்ணி.

Representational Image

“இங்க அப்படித்தாம்மா. பாத்ரூம் வசதி எல்லாம் கிடையாது. ரெண்டுக்குன்னா கையில ஒரு சொம்புல தண்ணி எடுத்துக்க வேண்டியது தான். அதுக்கு, அதா, அந்தப் பக்கத்துல கருவேல மரம் கூட்டமா இருக்குல்ல. அங்கிட்டு போக வேண்டியது தான்”

அந்த நரக நிமிடங்களில் இருந்து மீண்டு கிளைக்குத் திரும்பியதும் முதல் வேலையாக ஒரு ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு திரும்பிப் போய் விடலாம் என்று முடிவெடுத்தாள். வெள்ளைத்தாளை எடுத்து எழுதத் தொடங்கும் போது அங்கயற்கண்ணிக்கு அதில் சினிமாவில் வருவது போல் அவளுடைய அம்மா தம்பி இருவர் முகமும் தெரிந்தது. வேறுவழியின்றி அதைக் கிழித்துப் போட்டுவிட்டு எதிரில் நின்றிருந்த பாட்டியின் பாஸ்புக்கில் பதிவு செய்யத் தொடங்கினாள்.

“அதுக்கப்புறம் எப்படி இதை மேனேஜ் செஞ்சீங்க” இப்போது அதிர்ந்து போய் கேட்டது நான்.

“ஒண்ணும் செய்யல. எல்லா கஷ்டமும் அனுபவிக்குற வரைக்கும் தான். அது கொஞ்ச நாள்ல பழக்கமாயிடுச்சு. அங்க இருக்கிற சனங்க எல்லாம் இத ஒரு கஷ்டமாகவே நினைக்காம சாதாரணமாகத்தானே எடுத்துக்கிறாங்க. அது பழகினதும் நம் மனசும் அங்க இருக்கிறதுலயே சுத்தமான, வசதியான இடத்தை தேடுறதப் பற்றி மட்டுமே கவலைப்படும்.”

என்ன ஒரு தீர்க்கமான சிந்தனை இந்த பெண்ணுக்கு. ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

“மேனேஜருக்கும் இதே நிலைமை தானா?”

‘மேனேஜரா, அவர் பாடு இன்னும் திண்டாட்டம்” என்று சொல்லிச் சிரித்தாள் அங்கயற்கண்ணி. “மானேஜர் சொம்பு எடுத்துட்டு கொல்லப்பக்கம் போனாலே சுத்துவட்டாரத்துல எட்டுபட்டிக்கும் விஷயம் தெரிஞ்சிடும். எவனுக்கெல்லாம் லோன் சாங்ஷன் ஆகலயோ அவனெல்லாம் சொம்பு எடுத்துகிட்டு ஸ்பாட்டுல வந்து அவர சுத்தி உக்காந்துடுவாங்க. கிட்டத்தட்ட ஒரு லோன் மேளா கஸ்டமர் மீட்டிங் அங்கேயே நடந்து முடிஞ்சிடும்”

ராமசுப்பு அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சிரித்தார்.

“என்ன ஆச்சு சுப்பு சார்” என்று மாலா கேட்க

“ஒண்ணும் இல்ல.. நம்ம மானேஜரை அந்த இடத்துல நினைச்சுப் பாத்துக்கிட்டேன்” என்றார்.

“நீங்க இந்த விஷயத்த யூனியன், ஹெட் ஆஃபீஸ் இங்கெல்லாம் எடுத்துட்டு போகலயா” கேட்டது நான்.

“கோபி நாத் சார். பாய்ண்ட்டுக்கு வந்துட்டீங்க. இத்தனை காலமா இது அவங்களுக்கெல்லாம் தெரியாதுன்னா சொல்றீங்க.. இது எப்படின்னா சில கிராமத்துல கரண்ட் வசதி, ஆஸ்பிட்டல். ரோடு வசதி இதெல்லாம் இருக்காது.

ஏன்னு பாத்தா அங்க மொத்தமே நூறு பேர் கூட இருக்க மாட்டாங்க. அரசியல்வாதிகளைப் பொறுத்த மட்டும் அது நூறு உயிர் இல்ல. நூறு வோட்டு. இதுக்காக வேண்டி இவ்வளவு செலவு அங்க தேவையான்னு யோசிப்பாங்க. அதைப் போலத் தான் எங்க கிளையும். பெருசா லாபம் வராத இடம். கஸ்டமர்ஸ் எல்லாம் சாதாரண சனங்க. கூடுதலா செலவு செய்வதை நிர்வாகம் தவிர்க்கும். ரெண்டே உறுப்பினர்களுக்காக குரல் கொடுக்க சங்கமும் தயங்கும். இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் யாருக்கு போஸ்டிங் போடுவாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா? என்னைப் போல புதுசா வேலைக்கு சேர்றவங்க. அப்புறம் பனிஷ்மெண்ட் டிரான்ஸ்பர்.”

எனக்கு இப்போது விவரம் புரிந்ததால் அங்கயற்கண்ணி முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவே கூச்சமாக இருந்தது.

சாப்பிடும் போது கேட்க முடியாத ரசாபாசமான கதையென்றாலும் அந்த உணர்வு எங்களுக்கு உறைக்காமல் அதிர்ச்சியும் பச்சாதாபமும் தான் மேலோங்கி நின்றது. எல்லோரும் கதை சுவாரசியத்தில் சாப்பிட்ட கை கழுவுவதைக் கூட மறந்து விட்டோம். எல்லோரும் எழுந்தபோது மாலா அந்தக் கேள்வியைக் கேட்டாள் “அப்புறம் உங்க ப்ராஞ்ச்ல கடைசி வரை டாய்லெட் வசதியே வரலயா?”

“வந்ததே.. அது வேற ஒரு கதை..” என்று புன்முறுவல் பூத்தாள் அங்கயற்கண்ணி.

“உன் கைவசம் நிறைய கதை இருக்கும் போல. இங்கேயே இரு. அதையும் கேட்டுடலாம். சட்டுனு கையக் கழுவிட்டு ஓடியாறோம்” என்று கிளம்பினார்கள் மாலாவும் ராமசுப்புவும். கதிரவன் அங்கிருந்த தினசரி பேப்பரிலேயே கையைத் துடைத்துக் கொண்டான்.

இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அங்கயற்கண்ணியிடம் “உங்களுக்கு யூனியன் கிட்ட இருக்கிற கோபம் புரிஞ்சிக்க முடியுது. ஆனாலும்.” .என்று ஆரம்பிக்க

“பரவாயில்ல கோபிநாத் சார். நான் யூனியன்ல ஜாயின் பண்ணக் கையெழுத்து போட்டுத்தரேன். அது எனக்கு ஒரு பிரச்னையே இல்லை. அப்ப இருந்த கோபத்தில வெளியேறினேன். அவ்வளவு தான்” என்று சொல்லிவிட்டு எழுந்தாள் அங்கயற்கண்ணி. அவள் திரும்பி வருவதற்குள் லஞ்ச் ரூமில் எல்லோரும் ஆஜர்.

இடைவேளைக்கு பிறகு வரும் சினிமாக் கதையின் தோரணையுடன் அங்கயற்கண்ணி தொடர்ந்தாள்.

இப்படியே நாளொரு புதரும் பொழுதொரு கருவேல மரமென்று எங்கள் வாழ்க்கைப் போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் வங்கிக் கிளைக்கு உயர் அதிகாரி ஒருவர் ரீஜினல் ஆபிஸிலிருந்து ஆய்வுக்கு வருவதாகச் செய்தி வந்தது. அங்கயற்கண்ணியும் மானேஜரும் சேர்ந்து டாய்லெட் வசதி வேண்டி ஒரு விண்ணப்பம் தயார் செய்தார்கள். அவர் திரும்பிச் செல்லும் சமயம் அவரிடம் கொடுக்கலாம் என்று முடிவானது.

அதிகாரியின் டிரைவர், சந்திரனின் உறவுக்காரப் பையன் என்பதால் முன்கூட்டியே விவரங்கள் கிடைத்தது. கடைசியில் ஒன்பது மணிக்கு வரவேண்டியவர் கார் கோளாறு ஏற்படவே தாமதமாக வந்து சேர்ந்தார். காரை டிரைவர் பழுது பார்த்துவிட்டுத் திரும்ப இரவு ஏழு மணிக்கு மேல் ஆகிவிடலாம் என்பதால் அதிகாரிக்கு மதிய உணவு கிளையிலேயே ஏற்பாடு செய்யுமாறு எங்களைக் கேட்டுக்கொண்டான்.

அதிகாரி நல்ல அசைவப் பிரியர் என்பதால் சந்திரனிடம் மானேஜர் சொல்லி பலமான காரசாரமான சாப்பாடு தயாரானது. “நான் பாத்துக்கறேன் சார். எல்லாம் பிளான் படியே நடக்கும்” என்றான் பியூன் சந்திரன்.

சரியாக மாலை ஆறு மணிக்கு ஆய்வை முடித்த அதிகாரி வயிறைத் தடவியபடி “ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு” என்று கேட்க கேஷியர், “சந்திரா.. சாரை கொல்லப்பக்கம் கூட்டிட்டு போ” என்றார். சந்திரன் சொம்புடன் “வாங்க சார்” என்று வெளியே அவருக்கு ஸ்பாட்டைக் காட்ட ‘வாட் நான்சென்ஸ்’ என்று அதிர்ந்தாராம்.

சந்திரனுக்கு உயர் அதிகாரி பயமெல்லாம் தெரியவில்லை. “சார், இங்க பக்கமா டாய்லெட் வசதியெல்லாம் இல்ல. நாலு மைல் தாண்டி பண்ணையார் வீடு இருக்கு. என் சைக்கிள்ல டபுல்ஸ் போலாம். ஒரு மணி நேரம் ஆகும் சார். அதுவரத் தாங்குமா” என்று கேட்டிருக்கிறான். ஆடிப்போயிருக்கிறார் அதிகாரி. பாவம், வேறு வழியில்லாமல் ஒரு க்ளீன் ஸ்பாட் சந்திரன் ஏற்பாடு செய்து தர, அவன் காவலுடன் வாழ்வில் முதல்முறையாக வானம் பார்க்க தன் ஜோலியை முடித்தார்.

Representational Image

“என்னம்மா.. ஆய்வு செய்ய வந்த அதிகாரிய ஆய் போக வெச்சிட்டீங்களே” என்று சொல்லியபடி அவருக்கு மூன்றுமுறை சொம்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டு ஓடினான் சந்திரன்.

“நல்ல்வேளை, ஊர் சனங்களுக்கு தெரிஞ்சிருந்தா உயர் அதிகாரியோட நேரடியா லோன் விஷயம் பேசலாம்னு ஸ்பாட்டுல குவிஞ்சிருப்பாங்க” என்று கதிரவன் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள்.

“இதனால அவருக்கு உங்க மேல கோபம் ஏதாவது.”. ராமசுப்பு கேட்க,

“இதுல எங்க தப்பு என்ன இருக்கு? கோபம் இருந்தா, போகும்போது சந்திரனுக்கு அம்பது ரூபா கொடுப்பாரா என்ன..”

“வாட்டர் சர்விஸ் சார்ஜ்” என்றான் கதிரவன்.

“அப்புறமா ப்ராஞ்சுக்கு ஏதாவது மெமோ வந்திருக்குமே..”

“ம்ம்.. வந்தது.. மெமோ இல்ல. டாய்லட் கட்ட சாங்ஷன் லெட்டர்” என்று அங்கயற்கண்ணி கதையை முடிக்க.

“எல்லாம் சரி. அந்த லஞ்ச் பிளான் யாரோடது? கண்சிமிட்டியபடி மாலா கேட்டதற்கு பதில் கூறாமல் சிரித்தாள் அங்கயற்கண்ணி.

மாலை அலுவல் முடிந்தபின் அங்கயற்கண்ணியிடம் “நான் ரெண்டு நாள் லீவு. ஆபிஸ் வரமாட்டேன்..” என்றதும்

“சார். நான் வேணும்னா நம்ம பாத்ரூம், சோப்பு சீப்பு கண்ணாடி விஷயமா மானேஜர் கிட்ட பேசவா”

“தாராளமா பேசுங்க. ஆனா அது சோப்பு சீப்பு கண்ணாடியில்ல..  சோப்பு, டைல்ஸ், கண்ணாடி” என்றேன் சிரித்தபடி. 

இரண்டு நாட்கள் லீவுக்குப் பிறகு பணிக்கு திரும்பிய அன்று பாத்ரூமுக்குள் சென்றபோது அங்கு புது கண்ணாடி, ஷெல்ஃபில் டெட்டால் சோப்பு.. தரையில் உடைந்திருந்த டைல்ஸ் அடையாளமேயில்லை.

ஆனால் எங்கள் சங்கத்துக்குக் கிடைத்த, மனித நேயம், ஆளுமை, செயல்திறன், மதிநுட்பம் அனைத்தும் பெற்ற இளம் பிரதிநிதியின் அடையாளம் தெரிந்தது. 

எங்கள் வீட்டு பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டு பேரன் கிரீஷ் தபதபவென்று உள்ளே ஓடினான். நான் ஈசிசேரில் மீண்டும் சாய்ந்தேன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.