
அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல் தகனம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல்
நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் (85) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(மார்ச் 24) காலை தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.
சுப்பிரமணியம் உடல் சென்னை, ஈசிஆர் ரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உடல் தகனம்
தொடர்ந்து சுப்பிரமணியம் உடல் சென்னை, பெசன்ட் நகர் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. தந்தையின் உடலை அஜித் சுமந்து சென்றார். அங்கு வைத்து இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்ட பின் நண்பகல் 12.15 மணியளவில் அவரது உடல் மின்மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.
வேண்டுகோள்
முன்னதாக, ‛‛எங்கள் தந்தை 60 ஆண்டுகள் எங்கள் தாயின் அன்போடும், அர்பணிப்போடும் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். தந்தையாரின் இறுதிச்சடங்கு ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்து அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்து கொண்டு குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதிசடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக் கொள்கிறோம்'' என அஜித் உள்ளிட்ட அவரது சகோதரர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
“நடிகர் அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
முன்னாள் முதல்வரும், அதிமுக.வின் இடைக்கால பொதுச்செயலாருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தி : ‛‛தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தந்தையை இழந்து வாடும் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்'' என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி
உதயநிதி வெளியிட்ட பதிவு : ‛‛நடிகர் அஜித்குமாரின் அன்புத்தந்தையார் திரு.பி.எஸ்.மணி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். அஜித் அவர்களின் இல்லத்துக்கு சென்று அவருடைய தந்தையாரின் திருவுடலுக்கு மரியாதை செலுத்தினோம். குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தோம்'' என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.