’தஹி’ இந்தித் திணிப்பு அறிவிப்பை வாபஸ் வாங்கியது FSSAI! இந்தித் திணிப்புக்கு கல்தா

CM Stalin vs FSSAI: இந்தியாவில் உணவுப் பொருட்களின் தரத்தை நிர்ணயிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நிறுவனம்  FSSAI. உணவுப் பாக்கெட்டுகள் மீது என்னென்ன விஷயங்களை பொறிக்க வேண்டும் என்பதையும் உணவு பாதுகாப்பு ஆணையம் தான் நிர்ணயிக்கிறது. சமீபத்தில் தயிர் பாக்கெட்டுகளில் பிராந்திய மொழிகளில் பெயர் பொறிக்க வேண்டும் என்றும் அது சம்பந்தமாக ஏதாவது பரிந்துரைகளை வழங்குமாறும் கேட்கப்பட்டிருக்கிறது. 

இது தொடர்பாக உணவு பாதுகாப்பு ஆணையம் பால்வள நிறுவனங்களான ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி நிறுவனங்களுக்கு அனுப்பி இருக்கும் பதிலில் Curd என்று ஆங்கிலத்துக்குப் பதில் ‘தஹி’ என்று இந்தியில் பொறிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அடைப்புக்குறியில் வேண்டுமானால் ‘தயிர்’ என்று குறிப்பிடலாம் என்று சொல்லி இருக்கிறது. அதாவது இந்தி வார்த்தைக்கு முதன்மை இடமும், தமிழ், வார்த்தைக்குப் பின்னுரிமையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, நந்தினி நிறுவனத்திற்க்கு அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் ‘மொசரு’ என்ற கன்னட வார்த்தையை குறிப்பிடலாம் என்று சொல்லி இருக்கிறது.
இந்த குறிப்பு தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனத்திற்கும், நந்தினிக்கு அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் Curd என்று ஆங்கிலத்துக்குப் பதில் ‘தஹி’ என்று இந்தியில் பொறிக்க வேண்டும் என்றும், ‘மொசரு’ என்ற கன்னட வார்த்தையை குறிப்பிடலாம் என்று சொல்லி இருக்கிறது. 

இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆவின் நிறுவனம், தங்களது தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ என்று  பொறிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டு இருக்கிறது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் டிவிட்டர் பதிவில் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். 

எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் FSSAI,  காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள் என்று மத்திய அரசை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

Curd/ தயிர் என்ற வார்த்தைக்கு ‘தஹி’ என்று இந்தியில் பொருள் தயிர் என்ற விஷயமே தமிழ் நாட்டில் பெரும்பாலானோருக்கு இந்த சர்ச்சை மூலம்தான் தெரிய வந்திருக்கும். 

தேசிய மொழி என்று ஒன்று இந்தியாவில் கிடையாது என்ற விஷயமே வட இந்தியர்கள் பலருக்குத் தெரியாது. ஆனால், இது தெரியாமல், இல்லாத ஒரு தேசிய மொழியை கட்டமைக்க தொடர்ந்து பல்வேறு வழிகளில் முயற்சி செய்து கொண்டே இருப்பது அதிர்ச்சியையும் ஆயாசத்தையும் ஏற்படுத்துகிறது.

பிராந்திய மொழிகள், மதங்கள், இனங்கள், கலாச்சாரங்கள் என பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா என்பது அதிகாரிகளுக்கு தெரியாமல் போவதே இதுபோன்ற விஷயங்களின் ஆணிவேர்.  ‘இந்தி’ என்ற மொழியை திணித்தே பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் கூட ஒற்றுமையை பேண முடியாது.

தாய் மொழிகளின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி உட்பட மத்திய அரசில், மூத்தத் தலைவர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற சில்லறை விஷயங்கள் மூலமாக இந்தியை பிராந்தியங்களுக்கு கொண்டு செல்ல, மொழியின் ‘பலம்’ புரியாத அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

எனவே, இந்தி மொழி மாநிலங்கள் மீது திணிக்கப்படாது என்றும், இந்தி தேசிய மொழி இல்லை என்றும், மத்திய அரசு வெளிப்படையாக சொல்ல வேண்டும். இது குறித்த தெளிவான சுற்றறிக்கையை அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் அனுப்ப வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் மீது இந்தி மொழி திணிப்பு என்ற குற்றச்சாட்டு முன்வைப்பதை தவிர்ப்பதற்கான ஒரே வழியாக இருக்கும். 

இல்லாவிட்டால், தாய் மொழிக்குத் தான் முதலிடம் என தமிழ் மக்கள் முன்னெடுத்த அரசியல், உரிமைப் போராட்டம் பிற மாநிலங்களிலும் தொடங்கிவிடும். ஏனெனில் தமிழ்நாடு ஏற்றிவைத்த மொழிப் போராட்டம் என்ற நெருப்பு நீறு பூத்த நெருப்பாக இருந்தாலும், வெளிப்பட்டால் இன்னும் வீரியமடையும். ’ஒற்றை மொழி’ என்ற தத்துவம் பலத்த எதிர்ப்பை சந்திக்கும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.