TET தேர்வு: என்னப்பா இது திராவிடமாடலுக்கு வந்த சோதனை..?

TET தேர்வு எழுதிய சுமார் 600 தேர்வர்கள் குழு கூறும்போது, ‘‘ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வாக நாடுமுழுவதும் TET தேர்வு நடத்தப்படுகிறது. இந்தநிலையில் சமூகநீதி மற்றும் இட ஒதுக்கீடு முறைகளைப் பாதுகாக்கும், இந்தியாவின் முதன்மை மாநிலம் தமிழ்நாடு. NEET உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை எதிர்க்கும் தமிழகம், TET தேர்வுகளில் மிகவும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் கடந்த காலகட்ட ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டையே தொடர்வது வியப்பாக உள்ளது.

ஆந்திரா கர்நாடகா, அஸ்ஸாம் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், TET தேர்வுகள் RTE ACT அடிப்படையில் நடந்து வந்தாலும், மாநிலங்களின் அதிகாரங்களுக்கு உட்பட்டு, தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதி அடிப்படையில் குறைத்து சிக்கல்கள் ஏதுமின்றி TET தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.

அதாவது மாற்றுத்திறனாளிகளுக்கு 40%, SC/ST பிரிவினருக்கு 45%, BC/MBC பிரிவினருக்கு 50% என்ற வகையில் 150க்கு பெறும் மதிப்பெண்களைப் பொறுத்து, ஆசிரியர் பணி நாடுநர்கள் தகுதி என நிர்ணயித்துள்ளனர்.

தமிழகத்தில், கடந்த 2013 ஆம் ஆண்டில், அரசாணை எண் 25 அடிப்படையில் 5% மதிப்பெண்கள் மட்டும் குறைக்கப்பட்டு இருந்தாலும், அதில் சமூக நீதி இல்லை என்பது வெளிச்சமான உண்மை.

அதாவது, Priority people, வகுப்பு வாரியான இட ஒதுக்கீடு பின்பற்றாமல் இன்றுவரை TET தேர்வுகள் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளிவரும் நாளன்று, தகுதியில்லாத ஆசிரியர்கள் 95% என முத்திரை குத்தப்பட்டு, கல்வியில் சிறந்து விளங்கும், நமது தமிழ்நாட்டு ஆசிரியர்களை நாமே தரக்குறைவாக பேசுவது மிகுந்த வேதனை தருகிறது.

பல்வேறு சிக்கலான சூழல்களுக்கு மத்தியில், பயின்று பட்டங்கள் இரண்டு, மூன்று எனப் பெற்றும், தாம் படித்த முதன்மைப் பாடங்கள் அல்லாமல் மற்ற பாடங்கள்தனில் படிக்கக்கூறுவது என மாறுபட்ட பல சூழல்களுக்கு மத்தியில், சமூக பொருளாதார எற்றத் தாழ்வுகள் இன்னும் நீங்காத நிலையில் ஒரு போட்டியில் அனைவரையும் ஓடச் சொல்லி, தகுதி பற்றி எடுத்தியம்புவதில் என்ன மனிதம் உள்ளதெனத் தெரியவில்லை.

TET என்பது ஒரு தகுதித் தேர்வு மட்டுமே. போட்டித் தேர்வு அல்ல. சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்களை மாற்றியமைத்து கடந்த TET தேர்வுகளின் தேர்ச்சி மதிப்பெண்களை மாற்றி, பல ஆண்டுகளாக அரசு ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பணி நாடுநர்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எதிர்வரும் அரசு ஆசிரியர் பணி நியமனத் தேர்விற்கு தயாராக ஒரு வழிவகையை நமது தமிழ்நாடு அரசு செய்துதர வேண்டும்.

சமூக நீதியை பாதுகாக்க தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல, மாண்புமிகு துறைசார் அமைச்சர்களும், சமூக நீதி காக்கும் அரசியல் கட்சிகளும் உதவ முன்வர வேண்டும்” என தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.