சென்னை திருவான்மியூரில் மத்திய கலாசார அமைச்சகத்தின் நேரடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக அந்தக் கல்லூரியின் முன்னாள் இயக்குநரே சமூக வலைதளத்தில் புகார் எழுப்பியிருந்தார். அதைத் தொடர்ந்து, மாணவிகளும் பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர்மீது பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளிருப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மாணவிகளின் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து தாமாக மாநில மகளிர் ஆணையம் முன்வந்து விசாரணையைத் தொடங்கியது. இதனிடையே, கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் புகாரளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து காவல்துறை பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்ணின் மாண்புக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் உதவி பேராசிரியர் ஹரி பத்மன்மீது வழக்கு பதிவுசெய்தது.
மாணவிகள் கடந்த 2 தினங்களாகப் போராட்டம் நடத்திவந்த நிலையில், மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் அடிப்படையில், மாணவிகள் தற்காலிகமாகப் போராட்டத்தைத் திரும்பப் பெற்றிருக்கின்றனர்.

இந்த நிலையில், உதவி பேராசிரியர் ஹரி பத்மனைக் கைதுசெய்யத் தனிப்படை அமைத்து காவல்துறை முனைப்புக் காட்டிவருகிறது. இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றுக்காக ஹைதராபாத்துக்குச் சென்ற ஹரி பத்மன் புகார் தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.