மெக்சிகோ: உலகெங்கும் ஹாட் ஏர் பலூன் என்பது இப்போது ஒரு பொழுதுபோக்காக மாறி வருகிறது. இருப்பினும், உரியப் பாதுகாப்பு இல்லையென்றால் இதில் மோசமான விபத்துகள் ஏற்படும். அப்படியொரு சம்பவம்தான் இப்போது நடந்துள்ளது.
வானத்தில் பறக்க வேண்டும் என்பது இங்கே பலரது கனவாகவே இருக்கும். இதன் காரணமாகவே விமானங்களில் பயணிக்க வேண்டும் என்பது பலரது கனவாகவும் ஆசையாகவும் இருக்கும்.
அதேபோல விமானங்களைத் தவிர்த்து ஹாட் ஏர் பலூன் போன்றவை மூலம் வானத்தின் மேலே பறந்தபடியே நமது ஊரின் அழகை நம்மால் ரசிக்க முடியும். இதற்கும் ரசிகர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.
ஹாட் ஏர் பலூன்
நம்ம ஊரை காட்டிலும் வெளிநாடுகளில் இதுபோன்ற ஹாட் ஏர் பலூன் ரொம்பவே பேமஸ்.. புறநகர்களில் இதுபோன்ற ஏர் பலூன்களில் அவர்கள் ஜாலியாக பறப்பார்கள். ஆனால், ஹாட் ஏர் பலூன்களை நாம் ரொம்பவே ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். அதில் எளிதாகத் தீப்பிடிக்கக் கூடிய வாயுக்கள் இருப்பதால், தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், அதான் மோசமான விபத்துகள் ஏற்படும்.

விபத்து
அப்படியொரு சம்பவம் தான் இப்போது மெக்சிகோ நாட்டில் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோ நகருக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற தியோதிஹுவாகன் தொல்பொருள் தளத்தில் பறந்து கொண்டிருந்த வெப்பக் காற்று பலூனில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஏர் பலூன் மேலே கிளம்பிய போது, கொஞ்ச நேரத்தில் திடீரென எதிர்பாராத விதமாக அதில் தீப்பிடித்துள்ளது. இதனால் அதில் இருந்தவர்கள் செய்வதே அறியாமல் குழம்பியுள்ளனர்.

குதித்த பயணிகள்
ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் அச்சத்தில் அவர்கள், பலூனில் இருந்து குதித்து உள்ளனர். இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 39 வயது பெண் மற்றும் 50 வயது ஆண் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மற்றொரு மைனர் சிறுவன் கடுமையான தீக்காயம் ஏற்பட்ட போதிலும், அவர் உயிர் பிழைத்துள்ளார். அந்த மைனர் சிறுவனின் முகத்தில் இரண்டாம் நிலை தீக்காயங்களும், வலது தொடை எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

மெக்சிகோ
மேலும், பலூனில் வேறு பயணிகள் யாரும் இருந்தார்களா என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விபத்து நடந்த தியோதிஹுவாகன் அங்கே இருக்கும் மிக முக்கிய சுற்றுலாத் தலமாகும். மெக்சிகோ நகரத்திலிருந்து வடகிழக்கே சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தியோதிஹுவாகனில் பல டூர் ஆப்ரேட்டர்கள் இதுபோன்ற ஹாட் ஏர் பலூன் சேவைகளை வழங்குகிறார்கள். அதுபோன்ற ஒன்றில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

ஏர் பலூன் திருவிழா
அதேநேரம் முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் செய்தால், ஹாட் ஏர் பலூன் என்பது பலரும் கொண்டாடும் ஒன்றாகும். முன்னதாக, கடந்த ஜன. மாதம் கோவை பொள்ளாச்சியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாகச் சர்வதேச பலூன் திருவிழா நடந்தது. முதல்முறையாக சுற்றுலாத்துறை தனியாருடன் இணைந்து இந்த திருவிழாவை நடத்துகிறது. பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் 3 நாட்கள் நடந்த பலூன் திருவிழாவில், மக்களுக்கும் மேலே பறந்த தங்கள் ஊரின் அழகை ரசிக்கும் வாய்ப்பு அமைந்தது.