'நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்' – செய்தியாளர்களிடம் நகைச்சுவையாக பதிலளித்த போப் பிரான்சிஸ்

ரோம்,

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 86 வயது போப் பிரான்சிஸ், மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக கடந்த புதன்கிழமை ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசத் தொற்றுநோய் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் சில நாட்களில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

போப் பிரான்சிஸ் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் உடல் நலம் பெற்ற போப் பிரான்சிஸ், மருத்துவமனையில் இருந்து வாட்டிகன் தேவாலயத்திற்கு திரும்பினார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள், “இப்போது எப்படி உணர்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த போப் பிரான்சிஸ், “நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்” என நகைச்சுவையாக பதிலளித்தார். மேலும் குருத்தோலை ஞாயிறை ஒட்டி நடைபெற உள்ள வழிபாடு கூட்டத்தில் போப் பிரான்சிஸ் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.