கோலியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான்!
நேற்று பஞ்சாப், மொஹாலி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி டக்வோர்த் விதிமுறையின் படி, 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 5 விக்கெட்கள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்திருந்தது. இதில் ஷிகர் தவான், பானுகா ராஜபக்சாவுடன் இணைந்து 86 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினார். இது ஐபிஎல் தொடரில் ஷிகர் தவானின் 94வது (50 ரன்கள்) பார்ட்னர்ஷிப் ஆகும். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ரசிகரின் ஜெர்சியில் கையெழுத்திட்ட தோனி!
நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்நிலையில் ரசிகர் ஒருவரின் ஜெர்சியில் தோனி கையெழுத்திடும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் “எப்போதும் நம் இதயங்களில் கையெழுத்திட்டுள்ளார்!” என பதிவிட்டுள்ளது.
கம்பேக் கொடுத்த மார்க் வுட்!
நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, தனது சொந்த மண்ணில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட், 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய இவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 49 ரன்களை விட்டுக் கொடுத்தார். 5 வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிக்குத் திரும்பியுள்ள மார்க் வுட், தனது முதல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி “மாஸ் கம்பேக்” கொடுத்துள்ளார்.

ரிஷப் பண்ட்-ன் நெகிழ்ச்சியான ட்வீட்!
நேற்று, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடியது. இந்த ஆட்டத்திற்கு முன்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், ரசிகர்களிடம் ஆடும் லெவனில் இடம்பெறவுள்ள வீரர்களை கணிக்கும்படி பதிவிட்டிருந்தது. இதற்கு பதில் அளித்த ரிஷப் பண்ட், “இம்பாக்ட் பிளேயர் விதியின்படி, நான் அணியில் 13 வது வீரர். இல்லையெனில், அணியில் 12 வது வீரராக இருந்திருப்பேன்” என பதிவிட்டுள்ளார். இம்பாக்ட் பிளேயர் விதியின்படி, 12 வது வீரராக “இம்பாக்ட் பிளேயர்” மட்டுமே களமிறங்க முடியும். கார் விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிஷப் பண்ட் இந்த தொடரில் விளையாடவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரோஹித்!
இன்றிரவு பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும், இந்த 2023 ஐபிஎல் தொடரில் தங்களுடைய முதலாவது ஆட்டத்தில் விளையாடவுள்ளது. இந்நிலையில், நேற்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியின் போது, ரசிகர் ஒருவரின் கையில் ரோகித் ஷர்மா கையொப்பமிட்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.