சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள்: தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்டப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தப் பணிகளை தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை (3-வது வழித்தடம்) 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை (4-வது வழித்தடம்) 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்) 47 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

இதில் மாதவரம் – சிறுசேரி வரையிலான 3வது வழிதடத்தில் மாதவரம், தபால் பெட்டி, மாதவரம் நெடுஞ்சாலை, அயனாவரம், புரசைவாக்கம், கெல்லீஸ், சேத்துப்பட்டு, ராயப்பேட்டை, பசுமைவழிச் சாலை, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைத்து சுரங்கம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 5 வது வழிதடத்தில் சாஸ்திரி நகர், ரெட்டேரி சந்திப்பு, அண்ணாநகர் பணிமனை, அண்ணாநகர் கேந்திரிய வித்யாலயா, கோயம்பேடு 100 அடி சாலை, விருகம்பாக்கம், ராமாபுரம், ஆலந்தூர், செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மற்றும் எல்காட்டில் சிமென்ட் தூண்கள் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று (ஏப்.4) ஆய்வு செய்தார். இதில் மாதவரம பால்பண்ணை, மாதவரம் தபால் பெட்டி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சுரங்கப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.