திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கு: கவுஸ் ஆதம்பாஷா ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

சென்னை: திமுக முன்னாள் எம்.பி டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பியின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக முன்னாள் எம்,பி. டாக்டர் மஸ்தான் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது நெருங்கிய உறவினரான இம்ரான்பாஷா என்பவர் மஸ்தானிடம் டிரைவராக வேலை செய்து வந்தார். மஸ்தான் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், டாக்டர் மஸ்தான் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி அவரது மகன் காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி சந்தேகத்தின் அடிப்படையில் கார் டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், டாக்டர் மஸ்தான் கொலையில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரது தம்பியான கவுஸ் ஆதம்பாஷாவை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கவுஸ் ஆதம்பாஷா ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து கவுஸ் ஆதம் பாஷா இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை முடிந்துவிட்டதால், ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

காவல் துறை சார்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் வினோத், இது சொத்துக்காக திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை. எனவே, விசாரணை முடிந்திருந்தாலும், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஜாமீன் கோரி கவுஸ் ஆதம்பாஷா தாக்கல் செய்த மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.