புராஜெக்ட் கே படக்குழுவினர் மீது வருத்தத்தில் ஆதிபுருஷ் இயக்குனர்

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பிரபாஸ், தான் நடித்த சாஹோ என்கிற ஒரு படத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தினார். ஆனால் அந்த படம் அவர் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற தவறியது. இதனால் தனது கொள்கையை மாற்றிக்கொண்டு தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார் பிரபாஸ். அந்த வகையில் தற்போது பிரசாந்த் நீல் டைரக்சனில் சலார், ஓம் ராவத் டைரக்ஷனில் ஆதிபுருஷ், நாக் அஸ்வின் இயக்கத்தில் புராஜெக்ட் கே மற்றும் இயக்குனர் மாருதி டைரக்ஷனில் ஒரு படம் என அவர் நடிப்பில் நான்கு படங்கள் தயாராகி வருகின்றன.

இதில் முதலில் வெளியாக இருக்கும் படம் ஆதிபுருஷ் தான். இதற்குமுன் வெளியிடப்பட்ட இந்த படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கிண்டலுக்கும், விமர்சனத்திற்கும் ஆளாகின. இருந்தாலும் வரும் ஜூன் மாதம் இந்த படத்தை வெளியிடும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் ஓம் ராவத். ஆனால் இன்னொரு பக்கம் புராஜெக்ட் கே படக்குழுவினர் தங்களது படப்பிடிப்பு குறித்த வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். இதனால் பிரபாஸ் ரசிகர்களின் கவனம் மட்டுமல்லாது மீடியாக்களின் கவனம் கூட அந்த படத்தின் பக்கம் தான் திரும்புகிறது என்கிற வருத்தத்தில் இருக்கிறார் இயக்குனர் ஓம் ராவத்.

இதற்கு முன்பு இப்படித்தான் சலார் படத்தின் அப்டேட்டுகள் அதிகம் வெளியானபோது அந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீலிடம் ஆதிபுருஷ் படத்தை ஹைலைட் செய்ய உதவுங்கள் என கேட்டுக்கொண்டதால் சமீப காலமாக சலார் பட அப்டேட்டுகள் வருவது குறைந்துவிட்டது. தற்போது புராஜெக்ட் குழுவினரிடம் இது போன்ற ஒரு கோரிக்கையை வைக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குனர் ஓம் ராவத்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.