சூடுபிடிக்கும் சத்யபால் மாலிக் விவகாரம்.. களத்தில் இறங்கிய அமித் ஷா.. கேட்டாரே ஒரு கேள்வி..!

டெல்லி:
புல்வாமா தீவிரவாத தாக்குதல் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி குறித்து காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வைத்த குற்றச்சாட்டு பெரும் விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்த சூழலில், ஆளுநர் சத்யபால் மாலிக்குக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி கேட்டுள்ளார்.

பாஜக மூத்த தலைவராக உள்ள சத்யபால் மாலிக், மேகாலயா ஆளுநர், ஜம்மு – காஷ்மீர் ஆளுநர் என பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இதனிடையே, கடந்த 2 ஆண்டுகளாகவே மத்திய அரசின் சில முடிவுகளையும், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளையும் வெளிப்படையாக சத்யபால் மாலிக் விமர்சித்து வருகிறார். இதனால் பாஜக தலைமை இவர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது.

இந்த சூழலில், கடந்த 14-ம் தேதி ஒரு தனியார் இணையதள சேனலுக்கு சத்யபால் மாலிக் பேட்டி கொடுத்தார். அப்போது அவரிடம் 2019-ம் ஆண்டு நிகழ்ந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் பிரதமர் மோடியை நேரடியாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

அலட்சியமே காரணம்:
அவர் கூறுகையில், “ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு பாதுகாப்புப் படையினர் சாலை மார்க்கமாக செல்வதால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது. இதனால் ஸ்ரீநகர் செல்ல ஒரு விமானம் வேண்டும் என சிஆர்பிஎப் படை கோரிக்கை வைத்தனர். இதனை நான் உள்துறை அமைச்சகத்திடம் கூறியபோது, அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. விமானம் தந்திருந்தால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள்” என அவர் கூறினார்.

வெளியே கூற வேண்டாம்:
மேலும், “புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு இந்த விஷயத்தை நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறினேன். அப்போது அவர் இந்த விவகாரம் குறித்து வெளியே எதுவும் பேச வேண்டாம் என கூறினார்” என சத்யபால் மாலிக் தெரிவித்தார். சத்யபால் மாலிக்கின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் தீயாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சத்யபால் மாலிக்கின் பேட்டியை வைத்து, பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வந்தன. எனினும், இதுதொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

சீனில் இறங்கிய அமித் ஷா:
இந்த சூழலில், ஆங்கிலத் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவரிடம், சத்யபால் மாலிக் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக நெறியாளர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த அமித் ஷா கூறியதாவது:

என்ன காரணம்?
முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். மறைக்கக்கூடிய வகையில் எந்த செயலையும் பாஜக செய்தது கிடையாது. இந்த விஷயம் பொதுவெளியில் வைத்து விவாதிக்க வேண்டிய விஷயம் கிடையாது. சத்யபால் மாலிக்குக்கு சில விஷயங்களில் தவறு நடப்பது தெரிந்திருந்தால், பதவியில் இருக்கும் போதே கூறி இருக்கலாமே.. அப்பொழுது ஏன் அவர் மெளனமாக இருந்தார்.. அன்று ஏதும் பேசாமல் இருந்துவிட்டு, இப்போது இப்படி பேசுவதற்கான காரணம் என்ன? அதனால்தான், அவரது நம்பகத்தன்மையை சோதிக்க வேண்டி உள்ளது என்று அமித் ஷா கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.