கர்நாடகத்தில் பசவராஜ்பொம்மை தலைமையிலான பா.ஜ.க. அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் புதியதாக 16-வது சட்டசபை தேர்வு செய்வதற்காக கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. தினமும் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் மனுக்களை தாக்கல் செய்து வந்தனர். வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று முன்தினம் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்கள் தொண்டர்களுடன் படையெடுத்தனர். காலை 11 மணிக்கு தொடங்கிய வேட்புமனு தாக்கல் மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. கடைசி நாளில் மனு தாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்ததால், 3 மணிக்குள் வந்தவர்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
நேற்று முன்தினம் மட்டும் 1,691 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தம் 3,632 பேர் 5,102 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதில் 3,327 ஆண்களும், 304 பெண்களும், ஒரு திருநங்கையும் அடங்குவர். நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. மனுக்களை வாபஸ் பெற நாளை 24-ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். அதன் பிறகு தேர்தல் களத்தில் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்குவார்கள்.