சென்னை: Mysskin (மிஷ்கின) வெற்றிமாறன் ஒருநாளைக்கு 100 சிகரெட்டுகளுக்கும் மேல் அடிப்பேன் என கூறியிருந்த சூழலில் மிஷ்கினும் இப்போது அதேபோல் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து அவர் இயக்கிய அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பையே பெற்றன.
அடிவாங்கிய மிஷ்கின்: மிஷ்கின் மிகவும் எதிர்பார்த்து செய்த படம் முகமூடி. எதார்த்த வாழ்க்கையிலிருந்து ஒரு சூப்பர் ஹீரோ என்ற ஒன்லைனை அடிப்படையாக வைத்து அந்தப் படம் உருவாகியிருந்தது. ஜீவா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மிஷ்கின் பேசிய பேச்சுக்கும், படத்துக்கும் துளிகூட சம்பந்தமே இல்லை என்றும் ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்தனர்.
ஃபேவரைட் பிசாசு: பேய் படங்கள் என்றாலே திகிலும், படபடப்பும் நிறைந்த காட்சிகள் என்ற டெம்ப்ளேட்டை உடைத்தவர் மிஷ்கின். அவர் இயக்கிய பிசாசு படத்தை பார்க்கும்போது பயம் வருவதற்கு பதிலாக அந்த பேய் மீது இரக்கமும், காதலும் வரும். அந்த அளவுக்கு படத்தை செதுக்கியிருப்பார். தற்போது அவர் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார். படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது.
நடிகராகவும் கலக்கும் மிஷ்கின்: இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவருகிறார் மிஷ்கின். சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் இப்பொது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். விஜய்யுடன் ஏற்கனவே யூத் படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தார் மிஷ்கின். இப்போது பல வருடங்களுக்கு பிறகு லியோவில் விஜய்யுடன் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிகரெட் அடித்தால் போதும் வெற்றிதான்: இந்நிலையில் டைனோசர்ஸ் என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், “சிகரெட் அடிக்கும் இயக்குநர்கள் எப்படியும் வெற்றி இயக்குநர்களாக வலம் வருவார்கள். நான் அடுத்த படத்துக்கான கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன். டைனோசர் படத்தின் படக்குழுவினர் என்னை பார்க்க வந்தபோது ஒரு பையனை காண்பித்து இவர்தான் இயக்குநர் என்றார்கள். அவரிடம் புகைப்பிடிக்கும் அடையாளம் இருந்தது.
ஒரு நாளுக்கு 100 சிகரெட்டுகள்: முதல் படமான சித்திரம் பேசுதடி படத்தின்போது ஒருநாளைக்கு 100 சிகரெட்டுகளை பிடித்தேன். அதன் பிறகு அஞ்சாதே படம் எடுக்கும்போது அது 120ஆக உயர்ந்தது. படைப்பாளியால் சிகரெட்டுகள் அடிக்காமல் இருப்பது கஷ்டம். இந்தப் படத்தின் இயக்குநரிடம் புகைப்படிக்கும் அடையாளத்தை பார்த்தபோதே இந்தப் படம் வெற்றி பெற்றுவிடும் என தெரிந்தது” என்றார்.
முன்னதாக, இயக்குநர் வெற்றிமாறன் ஒருநாளைக்கு 180 சிகரெட்டுகள் பிடித்துக்கொண்டிருந்ததாகவும், அதன் பிறகு சிகரெட் பழக்கத்தையே நிறுத்திவிட்டேன் என்று கூறியிருந்தார். இப்போது மிஷ்கினும் அதேமுறையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.