பேய் காற்று… அடை மழை… குஜராத்தை உருக்குலைத்த பிபர்ஜாய்… அடுத்து ராஜஸ்தான்!

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை கடந்த 6 மற்றும் 7-ந்தேதிகளில் புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு வங்கதேசம் பிபர்ஜாய் என பெயர் வைத்தது. வங்காள மொழியில் பிபர்ஜாய் என்றால் பேரழிவு, ஆபத்து என்று பொருள். பிபர்ஜாய் புயல் படிபடியாக வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11ஆம் தேதி அதிதீவிர புயலாக வலுவடைந்தது.

பிபர்ஜாய் புயல் 14 ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் நகரும் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டதால் 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ஜக்காவு துறைமுகம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி 10 நாட்களுக்கும் மேலாக அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த பிபர்ஜாய் புயல் நேற்று மாலை 4.30 மணியளவில் கரையை கடக்க தொடங்கியது.

குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜக்காவு துறைமுகம் அருகே கரையை கடக்க தொடங்கிய பிபர்ஜாய் புயல் நள்ளிரவுதான் முழுமையாக கரையை கடந்தது. பிபர்ஜாய் புயலின் மையமான கண் பகுதி கரையை நெருங்க நெருங்க மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்தன. வீட்டின் கூறைகளும் காற்றில் பறந்தன.

நாங்க பழைய பாஜக இல்ல… கொடுத்தா திருப்பி கொடுப்போம்… ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!

இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆனால் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. 3500க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனால் 940 கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. பிபர்ஜாய் புயலில் செல்போன் டவர்களும் இந்த பலத்த காற்றில் தப்பவில்லை. புயல் கரையை கடந்ததை முன்னிட்டு குஜராத் மாநிலத்தின் பல மாவட்டங்களில் நேற்று காலை முதலே பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

தொடர்ந்து குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளன. இதில் பல கால்நடைகளும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் கரையை கடந்த பிபர்ஜாய் புயல் வலுவிழந்து ராஜஸ்தான் நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் ராஜஸ்தானில் இன்று மிகக் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிலேருந்து நார்மலாக ஒரு வருஷம் ஆயிடுச்சு…. சமந்தா உருக்கம்!

மேலும் அடுத்த 24 முதல் 48 மணி நேரம் வரை வடக்கு குஜராத் மற்றும் தெற்கு ராஜஸ்தான் பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் நேற்று மாலை கரையை கடக்க தொடங்கிய நிலையில் நேற்று இரவு குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். சக்தி வாய்ந்த ‘பிபர்ஜாய்’ புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து மாநிலத்தின் நிலைமை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

மேலும் வன விலங்குகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி கிர் வனப்பகுதியில் உள்ள சிங்கங்களின் பாதுகாப்புக்காக மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். இதனிடையே மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. பிபர்ஜாய் புயலால் குஜராத்தின் கடலோர மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.