ஒடிசாவில் மீண்டும் பயங்கரம்… நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்… பலர் பலியான சோகம்!

ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் 280க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சிக்னல் இன்டர்லாக்கிங் பிரச்சினை காரணமாக விபத்து ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் உண்மையை கண்டறியும் வகையில் வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு சிறிய ரயில் விபத்துகள் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டு பதற்றமான சூழலை ஏற்படுத்தியது.

ஒடிசா பேருந்து விபத்து

அந்த வரிசையில் ஒடிசாவில் நிகழ்ந்துள்ள பேருந்து விபத்து மீண்டும் அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. நேற்று இரவு ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரில் இருந்து தப்டாபானி செல்லும் சாலையில் இரண்டு பேருந்துகள் எதிரெதிர் திசையில் வந்து கொண்டிருந்தன. ஒன்று, திருமண நிகழ்விற்காக சென்று திரும்பி கொண்டிருந்த தனியார் பேருந்து.

நேருக்கு நேர் மோதி பேருந்துகள்

அதாவது, பெர்ஹாம்பூரில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். அங்கிருந்து திகபாஹண்டி வழியாக கண்டேடவுலிக்கு பேருந்தில் திரும்பி கொண்டிருந்தனர். மற்றொன்று ஒடிசா மாநில அரசு பேருந்து. எதிர்பாராத வகையில் இரண்டு பேருந்துகளும் மோதிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியாகினர். இதில் 7 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீவிர சிகிச்சை

10க்கும் மேற்பட்டோர் காயங்கள் உடன் எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திகபாஹண்டி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கஞ்சம் மாவட்டத்தில் அதிர்ச்சி

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை அனுப்பினர். கஞ்சம் மாவட்டத்தில் இந்த விபத்து நடந்துள்ள நிலையில், காயத்திற்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் தற்காலிக நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் இழப்பீடு

ஒடிசா பேருந்து விபத்திற்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையும் அளிக்க உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.