Maamannan: `கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும்…' – பா.ரஞ்சித்துக்கு பதிலளித்த உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, பகத் பாசில், உதயநிதி நடித்திருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படம் கடந்த 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் உரையாடலை நிகழ்த்தி வருகிறது.

அரசியல் தலைவர்கள் தொடங்கி பார்வையாளர்கள் வரை பலரும் பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, இப்படத்தில் பேசப்படும் அரசியல் கட்சிகளில் நிலவும் சாதிய மனநிலை, சாதிய ஆதிக்கம் குறித்த விமர்சனங்களை பலரும் முன்வைத்து விவாதப்பொருளாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் பா. ரஞ்சித், திராவிட கட்சிகளில் இருக்கும் சாதிய பாகுபாட்டை விமர்சித்து, “ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

மேலும், “அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள உதயநிதி, “`மாமன்னன்’ திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் – ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம்.

உதயநிதி, பா. ரஞ்சித்

ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூகநீதி’யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு. அண்ணா-கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவர் அவர்களும் இப்பணியைத் தொடர்கிறார்.

`பராசக்தி’யில் தொடங்கி `மாமன்னன்’ வரை கலைவடிவங்களிலும் `சமூகநீதி’யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம். ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டுகால போராட்டம் இது.

இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட. ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி” என்று ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.