Maamannan: `திமுகவில் இருக்கும் சாதிப் பாகுபாட்டை உதயநிதி ஸ்டாலின் அறிவார்!' – பா.ரஞ்சித் ட்வீட்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, பகத் பாசில், உதயநிதி நடிப்பில் கடந்த 29ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் `மாமன்னன்’.

அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அரசியலில் இருக்கும் சாதிய அரசியலைப் பற்றிப் பேசுகிறது இப்படம். இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது  பாராட்டுகளை  தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் இயக்குநர்  பா.ரஞ்சித் மாமன்னன் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

மாமன்னன்

அப்பதிவில் “ மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்?

சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக அவர் ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம்.

உதயநிதி ஸ்டாலின்

பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்! என்று குறிப்பிட்டிருக்கிறார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.