டெல்லியில் நாளை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் – சரத் பவார் அழைப்பு

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அஜித்பவார் மற்றும் அவரது 8 ஆதரவு எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தனர். தொடர்ந்து சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி அரசின் துணை முதல்-மந்திரியாக அஜித்பவார் பதவியேற்றுக் கொண்டார். மேலும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கும் கவர்னர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

மராட்டிய சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், இதில் சிலர் அஜித் பவாருக்கு ஆதரவு மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மும்பையில் இன்று அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் மும்பை நரிமன் பாய்ண்ட் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் 17 எம்.எல்.ஏ.க்களும், அஜித் பவார் தலைமையில் மும்பை பாந்த்ரா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் 28 எம்.எல்.ஏக்களும் ஆஜராகினர்.

இதனைத் தொடர்ந்து அஜித் பவார் தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்துள்ளது. அந்த மனுவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கான உரிமையை தங்களிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘கட்சியின் பெயரும் சின்னமும் யாரிடம் செல்லப்போவது இல்லை’ என்று தெரிவித்தார். தொடர்ந்து டெல்லியில் ஜூலை 6-ந்தேதி(நாளை) தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் சரத் பவார் அழைப்பு விடுத்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.