'பா.ஜ.க.வின் தோல்விகளை விளம்பரங்கள் மூலம் மறைத்துவிட முடியாது' – மல்லிகார்ஜுன் கார்கே

புதுடெல்லி,

பா.ஜ.க.விற்கு எதிராக தேர்தலில் வாக்களித்து மக்கள் பதிலளிப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“மோடி அரசின் கொள்ளையினால் பணவீக்கம் மற்றும் வேலையின்மை இரண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனால் பா.ஜ.க.வினர் அதிகார பேராசையில் மூழ்கியுள்ளனர். நாட்டில் வேலையின்மை விகிதம் 8.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமங்களில் வேலையின்மை விகிதம் 8.73 சதவீதமாக உள்ளது. மேலும் கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான தேவை உச்சத்தில் உள்ளது, ஆனால் வேலை இல்லை. கிராமப்புற ஊதிய விகிதம் குறைந்துள்ளது. காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நரேந்திர மோடி தேர்தலுக்கு முன், ‘அச்சே தின்’, ‘அமிர்த கால்’ போன்ற முழக்கங்களை முன்வைத்து, தங்கள் கட்சியின் தோல்விகளை விளம்பரங்களின் உதவியுடன் மறைத்துவிட பார்க்கிறார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். ஆனால் இம்முறை அது நடக்காது, பொதுமக்கள் விழிப்புணர்வுடன், பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்து அவர்களின் வெற்று முழக்கங்களுக்கு பதிலளிப்பார்கள். பொதுமக்கள் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவார்கள்” என்று மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.