South Africa gas leak: 16 dead | தென் ஆப்ரிக்காவில் விஷவாயு கசிவு: 16 பேர் பலி

ஜோஹன்னஸ்பர்க்,-தென்ஆப்ரிக்காவில் சட்டவிரோதமாக சுரங்கம் அமைத்து தங்கத்தை உருக்கிய போது, விஷ நைட்ரேட் வாயு கசிந்ததில் மூன்று சிறார்கள் உட்பட 16 பேர் பலியாகினர்.

தென்ஆப்ரிக்காவின் ஜோஹன்னஸ்பர்கை அடுத்த போக்ஸ்பர்க் நகரில் உள்ள ஏஞ்சலோ குடியிருப்புப் பகுதியில், சட்டவிரோதமாக தங்கத்தை எடுப்பவர்கள் அவற்றை உருக்கியதாக கூறப்படுகிறது.

இதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த சிலிண்டரில் இருந்து, நைட்ரேட் என்னும் விஷ வாயு கசிந்தது. இதையடுத்து அங்கிருந்த 1,6,15 வயது சிறார்கள், பெண்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

மயக்கமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, 24 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், 16 பேர் மட்டுமே பலியானது உறுதிசெய்யப்பட்டது.

இது குறித்து உள்ளூர் அவசரகால பேரிடர் மேலாண்மைக் குழுவின் செய்தி தொடர்பாளர் வில்லியம் என்ட்லாடி கூறுகையில், “ குடிசை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரில் இருந்து நைட்ரேட் விஷ வாயு வெளியேறியதே விபத்துக்குக் காரணம்,” என்றார்.

ஜோஹன்னஸ்பர்க் பகுதியில் ஏராளமான சட்டவிரோத சுரங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு பயன்படுத்தப்படாத, மூடப்படாத சுரங்கங்களில் பல தொழிலாளர்கள் தங்கத்தை தேடிச் எடுத்து வரும் நிலையில், இது போன்ற விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.