பத்து ரூபாய் பஞ்சாயத்து: மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் பணியாளர் தற்காலிக பணி நீக்கம்!

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் கூடுதல் விலைக்கு விற்ற டாஸ்மாக் பணியாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, தற்போது அமைச்சர் முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டிருக்கிறது.

டாஸ்மார்க் பணியாளர் தற்காலிக பணி நீக்கம்

அதனைத் தொடர்ந்து, அவரும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தால் புகார் அளிக்கலாம். புகார் தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் ஒரு சில இடங்களில் ஆய்வு செய்து, சில கடைகளுக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். அந்தப் பகுதியில் இயங்கி வரும் கடை எண் 5781 கொண்ட அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு திடீரென மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சென்று ஆய்வு மேற்கொண்டார்.

டாஸ்மாக் பணியாளர் தற்காலிக பணி நீக்கம்

ஆய்வின் போது கடை உதவி விற்பனையாளர் ரவிச்சந்திரன் மது பாட்டிலில் உள்ள விலையைவிட பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக பத்து ரூபாய் சேர்த்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மோசடி நடவடிக்கைகளை தடுத்தல் மற்றும் கண்டுபிடிப்பதற்கான விதி தொகுப்பு 2014-இன்கீழ் அரசு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ரவிச்சந்திரனை தற்காலிக பணிநீக்கம் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சௌந்தரபாண்டியன் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.