உலகில் யாசகர்கள் எங்கும் நிரம்பியிருக்கிறார்கள். உடல் ஊனமுற்றவர்கள், முடியாதவர்கள்தான் யாசகம் செய்கிறார்கள் என்றால், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தும், சிலர் யாசகம் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். இந்தியாவிலிருந்து சிலர் வெளிநாடுகளுக்கும் சென்று யாசகம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டின் பொருளாதார தலைநகரமான மும்பையில், உலகின் மிகவும் பணக்கார யாசகர் வாழ்ந்து வருகிறார். மும்பைக்கு வரும் யாரும் முயன்றால் கோடீஸ்வரராகலாம் என்பதற்கு பரத் ஜெயின் என்ற யாசகர், ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார். சில யாசகர்கள், யாசகம் செய்து அதை அப்படியே கையிலோ அல்லது தாங்கள் தங்கும் இடத்திலோ வைத்திருப்பது வழக்கம். ஆனால் பரத் ஜெயின் யாசகம் செய்தாலும், திருமணம் செய்துகொண்டு குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

தன்னால் சரியாகப் படிக்க முடியாவிட்டாலும், தன்னுடைய குழந்தைகள் இரண்டு பேரையும் கான்வென்ட் பள்ளியில் படிக்க வைத்திருக்கிறார். அதோடு மும்பையில் மிகவும் பணக்காரர்கள் வசிக்கக்கூடிய பரேல் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பரத் ஜெயின் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். அடுக்குமாடிக் குடியிருப்பில் பரத்துக்கு இரண்டு வீடுகள் இருக்கின்றன. அதோடு மும்பைக்கு அருகிலுள்ள தானே என்ற இடத்தில் இரண்டு கடைகளை விலைக்கு வாங்கி, வாடகைக்கு விட்டிருக்கிறார். இதில் மாதம் 30,000 ரூபாய்க்கு மேல் வாடகை கிடைக்கிறது.
இது தவிர தினமும் யாசகம் செய்வதன்மூலம் மாதம் 60,000 முதல் 70,000 ரூபாய் வரை, அவருக்கு வருமானம் கிடைக்கிறதாம். இரண்டிலும் சேர்த்து மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் அவருக்குக் கிடைக்கிறது. குடும்பம் மிகவும் நன்றாக வசதியுடன் வாழ்வதால், யாசகம் செய்வதை விட்டுவிடும்படி அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால் அதைத் தன்னால் கைவிட முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார் பரத் ஜெயின். மும்பையில் மக்கள் அதிகமாகக் கூடும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், ஆசாத் மைதானம் போன்ற இடங்களில்தான் பரத் ஜெயின் அன்றாடம் யாசகம் செய்து வருகிறார். தினமும் 10 முதல் 12 மணி நேரம் இவர் யாசகம் செய்கிறார்.

இதன் மூலம் அவருக்கும் தினமும் 2,000 முதல் 2,500 ரூபாய் வரை கிடைக்கிறது. பரத்துக்கு இப்போது மும்பையில் 7.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன. உலகின் மிகவும் பணக்கார யாசகராகக் கருதப்படும் பரத் ஜெயின், `பிச்சைக்காரன்’ பட ஹீரோ போன்று காலையிலேயே புறப்பட்டு வந்து, யாசகம் செய்வதற்கென்று தான் வைத்திருக்கும் உடையை அணிந்துகொண்டு, மக்களிடம் யாசகம் செய்வதைத் தொடங்குகிறார்.