பிரபல கிரிக்கெட் வீரரான தோனி `தோனி எண்டர்டெய்ன்மெண்ட்’ என்ற பெயரில் புதிதாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி ஹரீஷ் கல்யாண், நதியா, இவானா ஆகியோரின் நடிப்பில் `LGM’ என்ற படத்தைத் தயாரித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் தோனியும், அவரது மனைவியான சாக்ஷியும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் தோனி பேசியவை இங்கே.

“என்னுடைய டெஸ்ட் அறிமுகம் இங்கே சென்னையில்தான் நடந்தது. என்னுடைய அதிகபட்ச ஸ்கோரை இங்கே சென்னையில்தான் ஸ்கோர் செய்தேன். என் வாழ்வின் பல நல்ல விஷயங்கள் சென்னையில்தான் நடந்திருக்கின்றன.
2008-ல் ஐ.பி.எல் தொடங்கியது. அந்த ஆண்டே தமிழக மக்கள் என்னைத் தத்தெடுத்துக் கொண்டனர்.

எங்களுடைய முதல் தயாரிப்பாக ‘LGM’ படத்தை எடுத்திருக்கிறோம். ஒட்டுமொத்த குழுவும் ஒத்துழைத்ததால்தான் இந்தப் படத்தை மிகக்குறுகிய காலகட்டத்தில் எடுத்து முடிக்க முடிந்தது. இதில் பல சீனியர் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சில அறிமுகங்களும் இருக்கிறார்கள். உங்களுக்குப் படத்தைப் பார்த்தால் ஒரு விஷயம் புரியும்.
நதியா கண்ணாலயே நிறைய நடித்திருக்கிறார். நிறைய உணர்வுகளை அப்படியே தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார். மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையேயான கதை. இரண்டு பெண்களுக்கு நடுவே ஹரீஷ் கல்யாண் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். சாண்ட்விச்சுக்கு நடுவே சிக்கியதை போலத்தான் இருந்தது ஹரீஷின் நிலைமை.
இந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிப் பட வேலைகளில் இறங்கிய போது ஒன்றே ஒன்றை மட்டும் உறுதியாகச் சொன்னேன். கிரிக்கெட் ஆடும்போது நாங்கள் நல்ல உணவைத்தான் எதிர்பார்ப்போம். அதுபோல இங்கேயும் எல்லாருக்கும் முறையான நல்ல சாப்பாட்டைக் கொடுக்கச் சொன்னோம். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்படக் குழுவில் உள்ள அனைவருக்கும் நல்ல உணவைக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

‘LGM’ படம் குழந்தைகளுடன் சென்று பார்க்கக்கூடிய நல்ல பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும்” என்றார்.
கொஞ்சம் ஜாலியாகப் பேசத் தொடங்கிய தோனி, “கல்யாணமானவர்களுக்கு வீட்டில் பாஸ் யார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை” எனச் சொல்லிச் சிரித்தார்.

பின்னர், தீபக் சஹார் குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர்,
“தீபக் சஹார் போதைப் பொருளைப் போன்றவர். அவர் அருகில் இல்லையென்றால் அவர் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். அதேநேரத்தில் உடனிருந்தால் ஏன் அருகில் இருக்கிறார் எனத் தோன்றும்” என ஜாலியாகப் பேசி முடித்தார்.