சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பல சுவாரசியமான தகவலை தெரிவித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ், கீதாஞ்சலி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் புரட்சிப் பெண்ணாக நடித்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டை பெற்ற இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் அழுத்தமான கதாபாத்திரம் பாராட்டை பெற்றது. தற்போது இவர், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலா சங்கர், ரிவால்வர் ரீட்டா, ரகுதாத்தா என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
அதிர்ஷ்டமான நடிகை: இந்நிலையில்,பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கீர்த்தி சுரேஷ் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார். அதில், தமிழ் சினிமாவில் அழகும், அதிர்ஷ்டமும் கலந்த ஒரு நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான். குறுகிய காலகட்டத்திலேயே பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து விட்டார். இவரை தமிழில் அறிமுகப்படுத்தியது ஏ.எல்.விஜய் தான். அந்த படம் தோல்வியை சந்தித்தாலும் கீர்த்திக்கு நல்ல பெயர் கிடைத்தது.

கடும் விமர்சனம்: நடிகை சாவித்ரி பயோபிக் படமான மகாநடி படத்தில் நடிக்க இயக்குநர் கீர்த்தி சுரேஷை தேர்வு செய்தார். அப்போது கீர்த்தி சுரேஷ் எங்க, நடிகையர் திலகம் சாவித்ரி எங்க என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அந்த விமர்சனத்திற்கு எல்லாம் தனது நடிப்பால் சரியான பதில் அடி கொடுத்தார். தன் நடிப்பின் மூலம் சாவித்ரியை கண்முன் கொண்டுவந்து நிறுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வாங்கினார்.
விமர்சனங்களுக்கு பதிலடி: சமீபத்தில் உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போனார். அப்போது இனிமேல் கீர்த்தி சுரேஷ் அவ்வளவு தான் என்று பேச்சு எழுந்தது. அதை உடைத்து மீண்டும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அதே போல நடிகை கீர்த்தி சுரேஷ் நன்றாக கவிதை எழுதக்கூடியவர் அவர் எழுதிய பல கவிதைகள் பத்திரிக்கையில் வந்துள்ளன.

அழகும்,அறிவு கொண்ட நடிகை: அது மட்டுமில்லாமல் படப்பிடிப்பு தளத்தில் ஓய்வு நேரத்தில் புத்தகம் படித்து வருகிறார். ஜெயலலிதா தான் படப்பிடிப்பு தளத்தில் புத்தகம் படிப்பார். அவருக்கு அடுத்ததாக புத்தகம் வாசிப்பதில் ஈடுபாடு கொண்ட நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். இவை அனைத்தும் தெரிந்து கொண்டு தான் நடிகர் கமல்ஹாசன் மாமன்னன் இசைவெளியீட்டு விழாவில் அழகும்,அறிவும் கொண்ட நடிகை என்று பாராட்டி இருந்தார் என்று கீர்த்தி சுரேஷ் குறித்து பல தகவல்களை செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.