ராஜஸ்தான்: அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை… கண் பார்வையை இழந்த 18 பேர்? – என்ன நடந்தது?

ராஜஸ்தானில் சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 18 பேர், சிகிச்சைக்குப் பின் கண்பார்வை இழந்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் முதல்வர் அசோக் கெலாட்டின் சிரஞ்சீவி சுகாதார திட்டத்தின்கீழ் கடந்த மாதம் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சிகிச்சைக்குப் பின்னர் சில நோயாளிகள், தங்களுக்கு கண்களில் கடுமையான வலி இருப்பதாகத் தெரிவித்ததையடுத்து, மருத்துவமனையில் மீண்டும் சேர்ந்துகொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

கண்

அதைத் தொடர்ந்து நோயாளிகள் மீண்டும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டபோதிலும், இழந்த பார்வையை அவர்களால் மீண்டும் பெற முடியவில்லை. இது குறித்து ஊடகத்திடம் பேசிய பாதிக்கப்பட்ட நோயாளி சாந்தா தேவி, “எல்லாவற்றையும் ஒரு கண்ணால் பார்க்க முடியாது. கண்களில் வலி, நீர் வடிதல் ஆகியவற்றால் அவதியுறுகிறேன். ஆனால், இதுவொரு தொற்றுநோய் என்றும், மெதுவாகச் சரியாகிவிடும் என்றும் மருத்துவர்கள் கூறினார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும் மற்றொரு நோயாளி ராம் பஜன், “ஜூன் 23-ல் சிகிச்சை நடந்தது. அப்போது என்னால் பார்க்க முடிந்தது. ஆனால், அதுவும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. இப்போது, என்னால் எதையும் பார்க்க முடியவில்லை” என்று ஊடகத்திடம் கூறினார். அதேபோல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தினர் சிலர், மருத்துவ ஊழியர்களின் அணுகுமுறை மிகவும் மோசமாக இருந்ததாகவும், நோயாளிகள் வலியில் இருந்தாலும் அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கூறப்பட்டதாகவும் ஊடகத்திடம் குற்றம்சாட்டினர்.

மருத்துவர்

ஆனால், நோயாளிகளின் இந்தக் குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இது குறித்துப் பேசிய மருத்துவமனையின் கண் மருத்துவப் பிரிவு துறையின் தலைவர் டாக்டர் பங்கஜ் ஷர்மா, “மருத்துவர்களின் தரப்பில் எந்தக் குறையும் இல்லை. மைக்ரோபயாலஜி (microbiology) விசாரணை தற்போது நடந்து வருகிறது. அதன் முடிவுகள் வந்தபிறகு அவர்கள் என்னவென்று சொல்வார்கள்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.