ராகவா லாரன்ஸும் அவர் தம்பி எல்வினும் இணைந்து நடிக்க இருக்கும் படத்தின் பூஜை சென்னையில் தொடங்கியது.
அருள்நிதி கதாநாயகனாக நடித்த ‘டைரி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இன்னாசிப் பாண்டியன். இதில் பவித்ரா மாரிமுத்து, சாம்ஸ், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமான இது, வரவேற்பைப் பெற்றது. இதை தனது பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். கதிரேசன் தயாரித்திருந்தார். அவர் தயாரிப்பில் இன்னாசிப் பாண்டியன் மீண்டும் படம் இயக்க இருப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸும் அவர் தம்பி எல்வினும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் இத்திரைப்படம் தயாராகிறது. தெலுங்கு நடிகையான வைஷாலி ராஜ் இப்படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் சென்னையில் நேற்று தொடங்கிய நிலையில் சென்னை, தென்காசி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் 40 நாட்கள் தொடர்ந்து நடக்க இருக்கிறது.
ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கே பி ஒய் வினோத், விஜே தணிகை, சென்றாயன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க, சாம் சி.எஸ். இசையமைக்க, ‘டிமான்டி காலனி’,
‘டைரி’ உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாளுகிறார். படத்தொகுப்பை வடிவேலு விமல்ராஜ் மேற்கொள்ள, சண்டை பயிற்சிக்கு பேண்ட்டம் பிரதீப் பொறுப்பேற்றுள்ளார். பாடல்களை ஞானகரவேல் எழுத படத்தின் வசனங்களை ஞானகரவேல் மற்றும் இயக்குநர் இன்னாசி பாண்டியன் இணைந்து எழுதி உள்ளனர். கலை இயக்கத்திற்கு ராஜு பொறுப்பேற்க ஷேர் அலி உடைகளை வடிவமைக்கிறார்.
படத்தைப் பற்றி பேசிய இயக்குநர் இன்னாசி பாண்டியன், “இது ஒரு முழு நீள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம். இந்த கதையை தான் நான் எனது முதல் திரைப்படமாக இயக்க இருந்தேன், ஆனால் ஒரு சில காரணங்களால் அது இயலவில்லை. எனவே இதை எனது இரண்டாவது படமாக தற்போது இயக்குகிறேன்” என்று கூறினார்.