மாஸ்கோ: புதினுக்கு எதிராக மிகப் பெரிய கலகத்தை முயன்று தோல்வியடைந்த வாக்னர் குழு தலைவர் ப்ரிகோஜின் அரை நிர்வாணமாக இருக்கும் படம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் ரஷ்யாவில் உள்ள தனியார் மிலிட்டரி குழுவான வாக்னர் குழு ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகக் கலகம் செய்தது. தனியார் ராணுவத்தின் தலைவர் எவ்ஜெனி ப்ரிகோஜின் உத்தரவின் பெயரில் வாக்னர் குழு ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவை நோக்கி முன்னேறியது.
இதனால் அங்கே உள்நாட்டுப் போர் கூட ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இருப்பினும் திடீரென இந்த விவகாரத்தில் பெலராஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தலையிட்டார். இதையடுத்து கலகத்தைக் கைவிடுவதாக ப்ரிகோஜின் அறிவித்தார்.
எங்கே போனார்: இருப்பினும், அதன் பின்னர் ப்ரிகோஜின் சில நாட்களுக்கு ப்ரிகோஜின் பெலாரஸ் நாட்டிலேயே இருந்தார். சில நாட்களுக்கு முன்பு தான் அவர் ரஷ்யா திரும்பினார். கலகத்தைக் கைவிட்டதால் வாக்னர் குழுவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக புதின் அறிவித்திருந்தார். இருப்பினும், வாக்னர் குழு தலைவர் ப்ரிகோஜின் ரஷ்யாவுக்குத் திரும்பிய பிறகு அவர் பொதுவெளியில் வரவில்லை. அவரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதினை ப்ரிகோஜின் நேரில் சந்தித்ததாகவும் தங்கள் தரப்பு நியாயத்தை அவர்கள் புதினிடம் விளக்கியதாகவும் கூறப்பட்டது. இருப்பினும், இந்தச் சந்திப்பு தொடர்பான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையே அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் வாக்னர் குழு தலைவர் ப்ரிகோஜின் கொலை செய்யப்படலாம் அல்லது நிரந்தரமாகச் சிறை வைக்கப்படலாம் எனக் கூறியிருந்தனர். அதிபர் பைடன் கூட ப்ரிகோஜின் உணவில் பாய்சன் கலக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்திருந்தார்.
அரை நிர்வாண படம்: ப்ரிகோஜினின் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கும் நிலையில், அவரது புதிய போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இருப்பினும், அதில் அவர் அரைநிர்ணமாக வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு கேமராவை பார்த்து கை அசைக்கிறார். இந்தப் படங்கள் இணையத்தில் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டென்ட் ஒன்றில் சிறிய படுக்கையில் அரை நிர்வாணமாக அமர்ந்திருக்கும் பிரிகோஜின், கேமராவை நோக்கி கை அசைக்கிறார். அவை இழிவுபடுத்தும் வகையில் இந்தப் போட்டோ இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

எதற்கு எப்படி: கடந்த வாரமே ப்ரிகோஜின் குறித்து சில மோசமான படங்கள் ரஷ்யா ஊடகங்களில் வெளியாகியிருந்தது. ரஷ்யாவுக்கு எதிராகக் கலகம் செய்தது முதல் ப்ரிகோஜினை இழிவுபடுத்தும் வகையிலான படங்களை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டு வருகிறது. ப்ரிகோஜின் இனி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது அவரை அலட்சியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ரஷ்யா ஊடகங்கள் திட்டமிட்டு இதுபோன்ற காரியங்களைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்குப் பல இக்கட்டான சூழல்களில் கை கொடுத்தது என்னவோ வாக்னர் படை தான். இருப்பினும் கலகம் ஆரம்பித்த போது உக்ரைன் போர் உள்ளிட்ட பல விவகாரங்களில் ரஷ்யா ராணுவத்தின் செயல்பாடுகளை ப்ரிகோஜின் குற்றஞ்சாட்டினார். மேலும், தங்களுக்கு போதுமான ஆயுதத்தை வழங்க ரஷ்ய ராணுவம் மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ரஷ்யாவை முழுமையாகத் தனது கன்டிரோலில் வைத்திருக்கும் புதினுக்கு எதிராக யாரும் இவ்வளவு பெரிய கலகத்தைச் செய்ததே இல்லை. வாக்னர் கலகத்தை புதின் சமாளித்திருந்தாலும், வரும் காலங்களில் இதுபோல பல சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.