கில்கிட் பால்டிஸ்தான்,
கில்கிட் பால்டிஸ்தான் பகுதியில் இன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர். டயமர் மாவட்டத்தில் உள்ள தளிச்சி பகுதிக்கு அருகே காரகோரம் நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் 18 பேர் லாகூரில் இருந்து பனி படர்ந்த மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக உள்ளூர் மக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மூன்று பெண்கள், ஒரு குழந்தை மற்றும் ஒரு ஆண் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.