சேஷாசலம் வனப்பகுதியில் தமிழகத்தை சேர்ந்த 20 பேர் செம்மரம் கடத்தியதாக கைது

திருப்பதி: ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை மற்றும் திருப்பதி பகுதிகளில் உள்ள சேஷாசலம் வனப்பகுதிகளில் செம்மரம் வெட்டி கடத்தும் கும்பல் சுற்றி திரிவதாக வந்த தகவலின் அடிப்படையில், திருப்பதி அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிரடிப்படை டிஎஸ்பி முரளிதர் திருப்பதியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்னூல் சரக டிஐஜி செந்தில் குமார் உத்தரவின்பேரில் 3 குழுக்கள் சேஷாசலம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், திருப்பதி-பீலேர் சாலையில் வெங்கடபத்மாவதி கல்லூரியின் எதிர்புறம் உள்ள வனப்பகுதியில் சிலர் நடமாடுவதை கண்ட அதிரடிப்படையினர் அவர்களை சுற்றி வளைத்து 20 பேரை கைது செய்தனர்.

இவர்கள் வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள 19 செம்மரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதேபோன்று, கடப்பா மாவட்டத்தில் செம்மரம் கடத்தியதாக 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 32 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் பிராம்மணபள்ளி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தி வரும்போது அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ. 30 லட்சம் என கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.