‘நியோ மேக்ஸ்’ மோசடி | பாதிக்கப்பட்டோர் ஒரே இடத்தில் புகார் அளிக்க ‘மனு மேளா’: மதுரையில் இன்று நடக்கிறது

மதுரை: நியோ மேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் ஒரே இடத்தில் புகார் அளிக்கும் விதமாக மதுரையில் இன்று (ஜூலை 22) ‘மனுக்கள் மேளா’ நடக்கிறது.

விருதுநகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது நியோ-மேக்ஸ் என்ற ரியல் எஸ்டேட் மற்றும் தனியார் நிதி நிறுவனம். இந்நிறுவனத்துக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களும் உள்ளன. கூடுதல் வட்டி தருவதாக ஆசை வார்ததைகள் காட்டி, வாடிக்கையாளர்களிடம் சுமார் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து ஏமாற்றியுள்ளன.

இது குறித்த புகாரின் பேரில், ‘நியோ மேக்ஸ்’ மற்றும் துணை நிறுவன இயக்குநர்களான மதுரையைச் சேர்ந்த கமலக் கண்ணன் (55), பாலசுப்பிர மணியன் (54), திருச்சி வீரசக்தி (49), முகவர்கள் மணிவண்ணன், செல்லம்மாள் மற்றும் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் ஏற்கனவே நெல்லையில் செயல்படும் நிறுவனம் ஒன்றின் இயக்குநர்கள் தேவகோட்டை சைமன் ராஜா, மதுரை அச்சம்பத்து கபில், தூத்துக்குடி இசக்கிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஒரே இடத்தில் வைத்து பாதிக்கப்பட்டோரிடம் புகார்களை பெறும் வகையில் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் டிபிபி உத்தரவின்பேரில், ‘புகார் மனு மேளா’ என்ற நிகழ்வுக்கு மதுரை பொருளாதார குற்றப்பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, இந்த ‘மனு மேளா’ மதுரை -புதுநத்தம் ரோட்டிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று (ஜூலை 22) நடக்கிறது.

காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த மனுமேளாவில், பாதிக்கப்பட்டோர் உரிய ஆவணங்களுடன் வந்து எந்த பகுதியில் இருந்து பாதிக்கப்பட் டோம், தங்களது முகவர்கள், இயக்குநர்களின் பெயர்களை குறிப்பிட்டு புகார்களை அளிக்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பி குப்புச்சாமி தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.