சாதகமற்ற சூழல்… உதவிக்கரம் நீட்டும் ஸ்டாலின்… மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு!

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இனக்கலவரம் அரங்கேறி வருகிறது. மாநிலம் முழுவதும் நீடிக்கும் கலவரத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக் கணக்கான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வீடுகள், கல்வி நிறுவனங்கள், பொது மக்கள் கூடும் இடங்கள் என அனைத்தும் சேதப்படுத்தப்பட்டு தீக்கு இரையாக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில்மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விளையாட்டுப் போட்டிகளில் திறமைக்கு பெயர் பெற்ற மாநிலமான மணிப்பூரில் உள்ள தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் பார்ப்பதாக தெரிவித்துள்ளார். மணிப்பூர் எப்போதும் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான சாம்பியன்களை குறிப்பாக பெண் சாம்பியன்களை உருவாக்கி வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை அடுத்த ஆண்டு (2024) நடத்துவதற்கான மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஆசிய விளையாட்டு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதாக குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அம்மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள். வீராங்கனைகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பயிற்சிகள் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் உயர்தர பயிற்சிகள் அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வசதிகனை பயன்படுத்திக் கொள்ள அவர்களின் விவரங்களை அதாவது தங்கள் பெயர், முகவரி, அடையாளச் சான்று, தொடர்பு விவரங்கள், விளையாட்டு சாதனைகள் மற்றும் பயிற்சித் தேவைகள் போன்ற விவரங்களுடன் மின்னஞ்சல் ([email protected]) முகவரியில் மற்றும் தொலைபேசி எண்+91- 8925903047 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.